அமைதி என்பது வளர்ச்சிக்கான புதிய பெயர்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
ஜூன் 23, திங்கள்கிழமையன்று நியூயார்க்கில் நடைபெற்ற, வறுமை, வளர்ச்சியின்மை மற்றும் மோதல்களின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சவால்களை நேரடியாகக் கவனத்துக்கு கொண்டு வரும் விவாதத்தை ஏற்பாடு செய்ததற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் கயானா தலைமைக்கு திருப்பீடம் நன்றி தெரிவித்துள்ளது.
2030ஆம் ஆண்டின் வறுமை ஒழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான திட்டத்தை இந்த பன்னாட்டு அமைப்பு ஒப்புக்கொள்வது மிகப்பெரிய சவால் என்றும், நிலையான வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையும் ஆகும் என்றும், திருப்பீடம் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
மேலும், வறுமை ஒழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ,பகிரப்பட்ட இந்த உறுதிப்பாடு, அநீதி, அடிப்படை உரிமைகள் மறுப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய வறுமையின் மூலக்காரணங்களை நிவர்த்தி செய்வதற்கான பொறுப்பை அடிக்கோடிட்டு காட்டுகிறது என்றும் திருப்பீடம் தெரிவித்துள்ளது.
அமைதி என்பது வளர்ச்சிக்கான புதிய பெயர் என்று 1967ஆம் ஆண்டிலேயே திருத்தந்தை புனித 6ஆம் பவுல் இறைவாக்காக உரைத்துள்ளார் என்றும், அமைதி என்பது போர் இல்லாத நிலை மட்டுமல்ல, மாறாக உடன்பிறந்த உணர்வு, ஒத்துழைப்பு மற்றும் எல்லா நலன்களையும் ஊக்குவிப்பதாகும் என்றும் கூறியுள்ளது.
மருத்துவம், கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் போன்ற வளர்ச்சித் துறைகளில் முதலீடு செய்ய வேண்டிய வளங்களை, தொடர்ந்து அதிகரித்து வரும் இராணுவச் செலவீனங்களில் பயன்படுத்துவது குறித்து திருப்பீடம் கவலை தெரிவித்துள்ளது.
நீடித்த அமைதி என்பது தனி மனித மாண்பை மதிப்பதுடன், நீதியும், ஒற்றுமையும் மலரத் தேவையான சூழலை ஊக்குவிப்பது என்றும் கூறியுள்ள திருப்பீடம், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை மேம்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்