நவீன அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராட திருப்பீடம் அழைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அடிமைத்தனம் என்பது கடந்த காலத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு மட்டுமல்ல, மாறாக அது இன்றும் தொடர்கிறது என்று கூறினார் அமெரிக்க நாடுகள் நிறுவனத்தில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் Juan Antonio Cruz Serrano.
மார்ச் 25, இச்செவ்வாயன்று, OAS எனப்படும் அமெரிக்க நாடுகள் நிறுவனத்தில் இடம்பெற்ற, அடிமைத்தனம் மற்றும் அட்லாண்டிக் கடல் கடந்த அடிமை வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அனைத்துலக நினைவு தினத்தில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார் பேராயர் Cruz Serrano.
நவீன அடிமைத்தன வடிவங்களை தீவிரமாக எதிர்த்துப் போராடும் அதேவேளையில், அடிமைத்தனத்தின் வரலாற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறும் அதன் உறுப்பினர்களிடம் வலியுறுத்தினார் பேராயர் Cruz Serrano.
அடிமைத்தனம் தனிநபர்களை மனிதாபிமானமற்றதாக்குகிறது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில், மனித வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார் பேராயர் Cruz Serrano.
அமைதியான நல்லிணக்கத்தை வளர்க்கும் மற்றும் மனித மாண்பிற்கு முன்னுரிமை அளிக்கும் செயல்முறைகளுக்கு அழைப்புவிடுத்த பேராயர் Cruz Serrano அவர்கள், மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட, ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் ஆதரவளிப்பதில், மிகவும் நீதியான மற்றும் இரக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான திருத்தந்தையின் உறுதிப்பாட்டையும் தனது உரையில் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்