உலக ஆயர்கள் மாமன்றத்தின் பத்து ஆய்வுக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் செயலர்கள் கூட்டம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஒன்றிணைந்து பயணம் குறித்த 16-வது உலக ஆயர் மாமன்றத்தின் முதல் கூட்டத்தொடரின் இறுதியில் எழுந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமைத்த பத்து ஆய்வுக் குழுக்களின் பிரதிநிதிகள் பிப்ரவரி 18, இச்செவ்வாய்கிழமை காலையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டதாக செய்திக் குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
இக்கூட்டத்தில் ஒவ்வொரு குழுவின் ஒருங்கிணைப்பாளரும், ஆய்வு நெறிமுறை, பங்கேற்பாளர்கள், காலக்கெடு, சவால்கள் மற்றும் தீர்க்கப்படாத கேள்விகள் உட்பட அவர்களின் பணி பற்றிய இன்றுவரையிலான பதிவுகளைப் பகிர்ந்துகொண்டதாகவும் உரைக்கின்றது.
மேலும் சிக்கலான பிரச்சனைகளைக் கையாளும் குழுக்களுக்கு இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று கூறும் அச்செய்திக் குறிப்பு, இயேசுசபை அருள்பணியாளர் Giacomo Costa அவர்கள் நிலையான அறிக்கை வரைவை (consistent report drafting) உறுதி செய்வதற்கான வழிகாட்டுதலை வழங்கினார் என்றும், திருஅவை சட்டரீதியான பணிகளுக்கு நியமன ஆணையம் உள்ளது என்பது ஒருங்கிணைப்பாளர்களுக்கு நினைவூட்டப்பட்டது என்றும் சுட்டிக்காட்டுகின்றது.
இவ்வாண்டு மார்ச் 31 வரை மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கக்கூடிய வெளிப்புறமான பங்களிப்புகளை (external contributions) கருத்தில் கொள்வதன் முக்கியத்துவத்தை உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலாளர் கர்தினால் மாரியோ கிரேக் அவர்கள் வலியுறுத்தினார் என்றும் குறிப்பிட்டுள்ளது அச்செய்தித் தொகுப்பு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்