கலாச்சாரம் மற்றும் கல்வி வளத்தை வழங்குங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
“உங்களுக்கு முன் சென்றவர்களிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட வளமான ஆன்மிக மற்றும் கலாச்சார மரபை நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் குடும்பத்தினரும் எப்போதும் போற்றுவீர்கள்” என்று நான் இறைவேண்டல் செய்கிறேன் என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூன் 4, புதன்கிழமை, தேசிய இத்தாலிய அமெரிக்க நிறுவனம், அதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வேளை, அதன் இயக்குநர்கள் குழுவைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.
“இத்தாலியக் கலாச்சாரம் மற்றும் வரலாறு குறித்து இளைஞர்களுக்குத் தொடர்ந்து கல்வி கற்பிப்பதற்கான உங்கள் பணி, இரு நாடுகளிலும் கல்வி உதவித்தொகை மற்றும் பிற தொண்டு உதவிகளை வழங்குவது, இரு நாடுகளுக்கும் இடையே ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும் மற்றும் உறுதியான தொடர்பைப் பராமரிக்க உதவுகிறது” என்றும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
“இத்தாலியிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த பலரின் தனிச்சிறப்பு அவர்களின் கத்தோலிக்க நம்பிக்கையாகும்” என்றும், “அதன் வளமான பாரம்பரியமான புகழ்பெற்ற பற்றுணர்வு மற்றும் பக்தியை அவர்கள் தங்கள் புதிய தேசத்தில் தொடர்ந்து கடைப்பிடித்தனர்” என்றும் அவர்களுக்குச் சுட்டிக்காடினார் திருத்தந்தை.
மேலும் “புதிய நாட்டில் வளமான எதிர்காலத்திற்கான இறை நம்பிக்கையுடன் அவர்கள் வந்தபோதும், இந்த இறைநம்பிக்கைதான் அவர்களைக் கடினமான தருணங்களில் எல்லாம் தாங்கிப் பிடித்தது” என்றும் அவர்களுக்கு எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்