திருத்தந்தை 14-ஆம் லியோ பணியேற்பு சடங்கு மற்றும் வழிபாட்டு முறை
மெரினா ராஜ் – வத்திக்கான்
மே 18, ஞாயிறனன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் உரோம் உள்ளூர் நேரம் காலை 10 மணியளவில் இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 1.30 மணியளவில் திருஅவையில் 267-ஆவது திருத்தந்தையாகப் பொறுப்பெற்கும் திருவழிபாட்டு சடங்கானது நடைபெற இருக்கின்றது.
இவ்வழிபாட்டின்போது பால்யம் எனப்படும் கழுத்துப்பட்டை, மீனவர் மோதிரம் புதிய திருத்தந்தைக்கு வழங்கப்பட இருக்கின்றது. திருத்தூதர் பேதுருவின் கல்லறைக்குச் சென்று செபித்து, அங்கிருந்து வத்திக்கான் வளாகத்தை கீழைவழிபாட்டு முறை தந்தையர்கள் மற்றும் கத்தோலிக்க திருஅவை கர்தினால்களுடன் இணைந்து பவனியாக வந்தடைகின்றார் திருத்தந்தை.
புனித பேதுருவின் கல்லறையில்
வத்திக்கான் பெருங்கோவிலின் உள்புறம் இருந்து இவ்வழிபாட்டு முறை ஆரம்பாகின்றது. புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் கீழை வழிபாட்டுமுறை திருஅவையின் தந்தையர்களுடன் திருத்தூதர் பேதுருவின் கல்லறைக்குச் செல்கின்றார். தூபம் கொண்டு வணங்கி செபிக்கின்றார். திருஅவையின் முதல் திருத்தந்தையான திருத்தூதர் பேதுரு, அவரது மறைசாட்சியான வாழ்வு போன்றவற்றோடு நெருங்கிய தொடர்பை, புதிய திருத்தந்தை அவர்கள் ஏற்படுத்தும் வண்ணம் இந்நிகழ்வானது இடம்பெறுகின்றது.
தனது இரத்தத்தாலும் நம்பிக்கையாலும் கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்த திருத்தூதர் பேதுருவின் கல்லறையில் அவரையும் அவரோடு கிறிஸ்துவிற்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து மறைசாட்சிகளையும் நினைவுகூர்ந்து செபிக்கின்றார் புதிய திருத்தந்தை. பின் பால்யம், மீனவர் மோதிரம் நற்செய்தியைத் தாங்கிய கர்தினால்களுடன் பவனியான வத்திக்கான் வளாகத்தினை வந்தடைந்து திருப்பலியினை நிறைவேற்றுகின்றார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
வத்திக்கான் வளாகத்தில்
உரோமைக் கத்தோலிக்க திருஅவையின் புனித திருத்தந்தையர்கள், மறைசாட்சிகள், புனிதர்கள் ஆகியோரின் பரிந்துரையை நாடி “Laudes Regiæ” என்னும் பாடல் பாடப்படுகின்றது, உயிர்த்த இயேசு சீடர்களுக்குத் தோன்றி மீன்பிடிக்க வலைகளைப் போடுங்கள் என்று வலியுறுத்தும் நற்செய்தி பகுதியானது ஓவியமாக திரைச்சீலை ஒன்றில் வரையப்பட்டு வத்திக்கான் மேல்மாடத்தில் இருந்து தொங்கவிடப்படுகின்றது. Raffaello Sanzio அவர்களால் உருவாக்கப்பட்ட இவ்வோவியமானது வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் பாதுகாக்கப்படும் ஒன்றாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்