MAP

நாம் அனைவரும் வாழும் கடவுளின் இல்லம் – திருத்தந்தை

ஒவ்வொரு சகோதரியும் சகோதரனும் கடவுள் வாழும் இல்லம் என்பதை உணர்ந்து வாழ்வோம் – திருத்தந்தை 14-ஆம் லியோ.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நம்மில் வாழும் கடவுளின் ஆற்றல் என்பது தூய ஆவியின் கொடை என்றும், அவரே நம் கரங்களைப் பிடித்து, அன்றாட வாழ்க்கையில் கடவுளின் அருகிருப்பையும் நெருக்கத்தையும் அனுபவிக்கச் செய்து, நம்மைத் தம்முடைய இல்லமாக மாற்றுகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

மே 25, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய பாஸ்காகால மூவேளை செப உரையின்போது இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், தூய ஆவியே நம்மை வழிநடத்துகின்றார்,நமக்கு எல்லாவற்றையும் கற்பிக்கின்றார் என்றும் கூறினார்.

தங்களது தலைவராகிய இயேசுவின் மரணத்திற்கு முந்தைய நாள் அவரோடு ஒன்று கூடியிருந்த சீடர்கள், இறையரசிற்கு சான்றுகளாகத் திகழ்வதை எப்படி தொடர முடியும் என்ற பதட்டமும் வேதனையும் அடைகின்றார்கள் என்றும், அந்நிலையில் இயேசு “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்” (யோ:14:23) என்ற இறைவார்த்தையின் வழியாக ஆறுதல் அளிக்கின்றார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

நமது வாழ்க்கைப் பாதை மற்றும் நம்பிக்கைப் பாதை என கடவுள் நம்மை அழைக்கும் எல்லாவற்றிலும், சில சமயங்களில் நாம் குறைபாடு உடையவர்களாக நம்மை உணர்கிறோம் என்றும், நாம் நமது சொந்த ஆற்றலை நோக்காமல், நம்மைத் தேர்ந்தெடுத்த கடவுளின் இரக்கத்தை நோக்கியிருக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

“நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்”(யோ:14:27) என்ற இறைவார்த்தையின் வழியாக இயேசு சீடர்களை எல்லா வேதனைகளிலிருந்தும் கவலைகளிலிருந்தும் விடுவிக்கின்றார் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், நாம் அவருடைய அன்பில் நிலைத்திருந்தால், உண்மையில், அவரே நம்மில் வாழ்கின்றார் என்றும் கூறினார்.

நமது வாழ்க்கை கடவுளின் ஆலயமாகிறது, அவரது அன்பு நமக்கு அறிவூட்டுகிறது, நாம் சிந்திக்கும் முறையிலும் நாம் தேர்வு செய்பவைகளிலும் நமக்கு சிறந்த இடத்தை அளிக்கிறது, அது மற்றவர்களிடத்திலும் விரிவடைந்து, நம் வாழ்வின் அனைத்து சூழ்நிலைகளிலும் ஒளிரச் செய்கிறது என்றும் மொழிந்தார் திருத்தந்தை.

நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்கள், நமது கடமைகள், திருஅவையில் நமது பணி ஆகியவற்றில், நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் எடுத்துரைக்கும் வகையில், நாம் பலவீனமாக இருந்தாலும், கடவுள் நமக்குள் வாழ தூய ஆவியுடன் வருகிறார், அறிவூட்டுகிறார், மற்றவர்கள், சமூகம் மற்றும் உலகத்தின் மீதும் தம்முடைய அன்பின் கருவியாக நம்மை ஆக்குகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை. 

இந்த வாக்குறுதியின் அடிப்படையில், நம்பிக்கையின் மகிழ்ச்சியில், கடவுளின் தூய ஆலயமாக நாம் ஒன்றிணைந்து நடப்போம் என்றும், ஒவ்வொரு சகோதரியும் சகோதரனும் கடவுள் வாழும் இல்லம் என்பதை உணர்ந்து வாழ்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஏழை எளியவர்களிடமும் துன்பப்படுபவர்களிடமும் அவருடைய அருகிருப்பு வெளிப்படுகிறது என்பதை நினைவில் கொண்டு, அவருடைய அன்பை எல்லா இடங்களிலும் கொண்டு வருவதற்கு நம்மையே நாம் அர்ப்பணிப்போம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கவனமுள்ள மற்றும் இரக்கமுள்ள கிறிஸ்தவர்களாக  நாம் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.       

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 மே 2025, 13:47

அல்லேலூயா வாழ்த்தொலி என்றால் என்ன?

அல்லேலூயா வாழ்த்தொலி செபம் (அல்லது அல்லேலூயா வாழ்த்தொலி) நான்கு மரியா செபங்களில்  ஒன்றாகும் (மற்றவை l’Alma Redemptoris Mater,  l’Ave Regina Coelorum e il Salve Regina மீட்பரின் அற்புத அன்னை , வானக அரசியே வாழ்க மற்றும் வாழ்க அரசியே).

இது 1742ம் ஆண்டில், திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் , அதாவது உயிர்ப்பு ஞாயிறு முதல் தூய ஆவியார் பெருவிழா  நாள் வரை, மரணத்தின் வெற்றிக்கு அடையாளமாக மூவேளை செபத்திற்குப் பதிலாக, உயிர்ப்பு செபம் செபிக்கப்பட வேண்டுமென அறிவித்தார்..

அச்செபத்தை, மூவேளை செபத்தைப்போல, ஒரு நாளைக்கு மூன்று முறை அதாவது காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் , கடவுளுக்கும் மரியாவுக்கும் ஒவ்வொரு நாளும் செபிக்க வேண்டும் : .

ஒரு பக்தியுள்ள மரபுப்படி, இந்தச் செபம், ஆறு அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். அதேநேரத்தில், அச்செபம் பரவத்தொடங்கியது பற்றி 13ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது பிரான்சிஸ்கன் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டபோது. இது நான்கு சுருக்கமான வசனங்களை உள்ளடக்கியது, இவை ஒவ்வொன்றும் அல்லேலூயாவுடன் முடிவடைகின்றன. விண்ணக அரசியான மரியாவுக்கு  கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ள  மகிழ்ச்சியுடன் செபிக்கப்படுகிறது.

ஏப்ரல் 6, 2015, உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த நாளன்று , இயேசுவின் உயிர்ப்பு காலத்தில்  திருத்தந்தை  பிரான்சிஸ்  அவர்கள், இந்த செபத்தைப் பற்றி கூறும்போது போது, இதயத்தின் மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்

 "... மரியா  அகமகிழுமாறு நாம் அவரை அழைக்கிறோம், ஏனெனில், மரியா தன் வயிற்றில் தாங்கியவர், அவர் வாக்குறுதி அளித்தது போலவே உயிர்த்துவிட்டார்; நாம் மரியின் பரிந்துரையில் நம்பிக்கை வைப்போம். உண்மையில், நம்முடைய மகிழ்ச்சி மரியின்  மகிழ்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாகும், ஏனென்றால் மரியாவே இயேசுவின் நிகழ்வுகளைக் காக்கிறவர், விசுவாசத்தோடு பாதுகாக்கிறவர்.. எனவே, தாய் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதால்,  மகிழ்ச்சியாக இருக்கும் பிள்ளைகள் என்ற உணர்வில்,  இந்த செபத்தை நாம் செபிப்போம்.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >