நாம் அனைவரும் வாழும் கடவுளின் இல்லம் – திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
நம்மில் வாழும் கடவுளின் ஆற்றல் என்பது தூய ஆவியின் கொடை என்றும், அவரே நம் கரங்களைப் பிடித்து, அன்றாட வாழ்க்கையில் கடவுளின் அருகிருப்பையும் நெருக்கத்தையும் அனுபவிக்கச் செய்து, நம்மைத் தம்முடைய இல்லமாக மாற்றுகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
மே 25, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய பாஸ்காகால மூவேளை செப உரையின்போது இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், தூய ஆவியே நம்மை வழிநடத்துகின்றார்,நமக்கு எல்லாவற்றையும் கற்பிக்கின்றார் என்றும் கூறினார்.
தங்களது தலைவராகிய இயேசுவின் மரணத்திற்கு முந்தைய நாள் அவரோடு ஒன்று கூடியிருந்த சீடர்கள், இறையரசிற்கு சான்றுகளாகத் திகழ்வதை எப்படி தொடர முடியும் என்ற பதட்டமும் வேதனையும் அடைகின்றார்கள் என்றும், அந்நிலையில் இயேசு “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்” (யோ:14:23) என்ற இறைவார்த்தையின் வழியாக ஆறுதல் அளிக்கின்றார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
நமது வாழ்க்கைப் பாதை மற்றும் நம்பிக்கைப் பாதை என கடவுள் நம்மை அழைக்கும் எல்லாவற்றிலும், சில சமயங்களில் நாம் குறைபாடு உடையவர்களாக நம்மை உணர்கிறோம் என்றும், நாம் நமது சொந்த ஆற்றலை நோக்காமல், நம்மைத் தேர்ந்தெடுத்த கடவுளின் இரக்கத்தை நோக்கியிருக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
“நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்”(யோ:14:27) என்ற இறைவார்த்தையின் வழியாக இயேசு சீடர்களை எல்லா வேதனைகளிலிருந்தும் கவலைகளிலிருந்தும் விடுவிக்கின்றார் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், நாம் அவருடைய அன்பில் நிலைத்திருந்தால், உண்மையில், அவரே நம்மில் வாழ்கின்றார் என்றும் கூறினார்.
நமது வாழ்க்கை கடவுளின் ஆலயமாகிறது, அவரது அன்பு நமக்கு அறிவூட்டுகிறது, நாம் சிந்திக்கும் முறையிலும் நாம் தேர்வு செய்பவைகளிலும் நமக்கு சிறந்த இடத்தை அளிக்கிறது, அது மற்றவர்களிடத்திலும் விரிவடைந்து, நம் வாழ்வின் அனைத்து சூழ்நிலைகளிலும் ஒளிரச் செய்கிறது என்றும் மொழிந்தார் திருத்தந்தை.
நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்கள், நமது கடமைகள், திருஅவையில் நமது பணி ஆகியவற்றில், நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் எடுத்துரைக்கும் வகையில், நாம் பலவீனமாக இருந்தாலும், கடவுள் நமக்குள் வாழ தூய ஆவியுடன் வருகிறார், அறிவூட்டுகிறார், மற்றவர்கள், சமூகம் மற்றும் உலகத்தின் மீதும் தம்முடைய அன்பின் கருவியாக நம்மை ஆக்குகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த வாக்குறுதியின் அடிப்படையில், நம்பிக்கையின் மகிழ்ச்சியில், கடவுளின் தூய ஆலயமாக நாம் ஒன்றிணைந்து நடப்போம் என்றும், ஒவ்வொரு சகோதரியும் சகோதரனும் கடவுள் வாழும் இல்லம் என்பதை உணர்ந்து வாழ்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
ஏழை எளியவர்களிடமும் துன்பப்படுபவர்களிடமும் அவருடைய அருகிருப்பு வெளிப்படுகிறது என்பதை நினைவில் கொண்டு, அவருடைய அன்பை எல்லா இடங்களிலும் கொண்டு வருவதற்கு நம்மையே நாம் அர்ப்பணிப்போம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கவனமுள்ள மற்றும் இரக்கமுள்ள கிறிஸ்தவர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்