திருத்தந்தை பிரான்சிஸ் "ஓர் இறைமனிதர்" - இயேசு சபை தலைமையகம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் "ஓர் இறை மனிதராக வாழ்ந்தார் என்று புகழாரம் சூட்டியுள்ளார் உரோமையிலுள்ள அனைத்துலக இயேசு சபைத் தலைவர் அருள்பணியாளர் அர்த்துரோ சோசா, சே.ச.
ஏப்ரல் 23, இப்புதனன்று, உரோமையிலுள்ள இயேசு சபைத் தலைமையகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் இவ்வாறு மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் புகழ்மாலை சூட்டிய இயேசு சபைத் தலைவர், அவர் எல்லாரையும் திருப்திப்படுத்தவேண்டும் என்றோ அல்லது, தான் செய்யும் செயல்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டும் என்றோ விரும்பியது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கையும் தலைமைத்துவமும் அவரது ஆன்மிக அனுபவத்திலும், இறைத்திருவுளப்படி வாழ்வதற்கான அர்ப்பணிப்பிலும் ஆழமாக வேரூன்றியிருந்தன என்றும், உலகை அனைவருக்கும் நீதியான மற்றும் மனித மாண்பு நிறைந்த இல்லமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் அருள்பணியாளர் சோசா.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மக்கள் செல்வாக்கால் இயக்கப்படவில்லை, மாறாக தெளிந்து தேர்தல், உரையாடல் மற்றும் இறைவேண்டலால் இயக்கப்பட்டார் என்றும், காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப செயல்படவும், கடவுளின் பரிவிரக்கத்தைப் பற்றிய அவரது புரிதலுக்கேற்ப வாழ்ந்திடவும் கடும் முயற்சி செய்தார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் அருள்பணியாளர் சோசா.
மேலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிக்கல் நிறைந்த மனிதத் தன்மையை ஏற்றுக்கொண்டார் என்றும், கலாச்சாரங்கள் முழுவதும் ஒன்றிப்பை ஆதரித்தார் என்றும் மொழிந்துள்ள அருள்பணியாளர் சோசா அவர்கள், திருத்தந்தை எப்போதும் சகோதரத்துவம், மனித மாண்பு மற்றும் ஒன்றிப்பை ஊக்குவித்தார் என்றும் கோடிட்டுக்காட்டியுள்ளார்.
இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் பிறகு, திருஅவையின் எதிர்காலம் குறித்த கரிசனைகளை ஒப்புக்கொண்ட அவர், அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதில் தூய ஆவியார் வழிகாட்டுவார் என்பதில் தனக்கு அதிகம் நம்பிக்கை உண்டு என்பதையும் செய்தியாளர்களிடம் வலியுறுத்திக் கூறினார்.
இறுதியாக, 450 ஆண்டுகளுக்கும் மேலான சபையின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து பாதுகாக்கும் வண்ணம், அனைத்துலக இயேசு சபையினர், திருத்தந்தைக்குக் கீழ்ப்படிவதற்கான தங்கள் சிறப்பு வார்த்தைப்பாட்டைக் கடைப்பிடிப்பதிலும், புதிய திருத்தந்தைக்கு சேவை செய்யவதிலும் எப்போதும் தயாராக இருப்பார்கள் என்ற உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி இந்தச் செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்தார் அருள்பணியாளர் சோசா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்