தவக்காலத் தியானத்தில் காணொளி வாயிலாக பங்கேற்ற திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
மார்ச் 9, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் தவக்காலத்தை முன்னிட்டு தொடங்கியுள்ள தியானத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காணொளி வாயிலாக பங்கேற்றார் என்று திருப்பீடத் தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.
மார்ச் 10, திங்கள்கிழமை, திருத்தந்தையின் உடல் நிலை குறித்து வெளியிட்ட அறிக்கையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரவு (மார்ச் 9, ஞாயிற்றுக்கிழமை) நன்றாக நித்திரையில் ஆழ்ந்ததாகவும், தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மார்ச் 9 ,ஞாயிற்றுக்கிழமை அறிக்கை
மார்ச் 9, ஞாயிற்றுக்கிழமை காலையில் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் மற்றும் திருப்பீடச் செயலகத்தின் பொது விவகாரத்துறையின் நேரடிப் பொதுச்செயலர் பேராயர் Edgar Peña Parra இருவரும் திருத்தந்தையை மருத்துவமனையில் சென்று சந்தித்தனர். அதன்பின் திருத்தந்தை அவர்கள் மருத்துவமனையில் தன்னை கவனித்துக் கொள்ளும் குறிப்பிட்ட சிலருடன் இணைந்து ஞாயிறுத் திருப்பலியில் பங்கேற்றார்.
பிற்பகலில் வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கப்பூச்சின் சபை அருள்பணியாளர் ரொபர்த்தோ பசோலினி அவர்கள் வழிநடத்திய தவக்காலத் தியானத்தில், ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்தவாறே காணொளியின் வாயிலாக பங்கேற்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சுவாச உடலியக்க மருத்துவ சிகிச்சை முறைகளைத் தொடர்ந்து பெறும் திருத்தந்தை அவர்களுக்கு மருத்துவர்கள் திட உணவுகளை உண்பதற்குப் பரிந்துரைத்துள்ளனர்.
மேலும் திருத்தந்தையின் உடல் நிலை சீராக இருக்கின்றது எனவும், அவரது உடல் நிலையில் படிப்படியான முன்னேற்றங்கள் இருக்கின்றன எனவும் தெரிவித்துள்ள திருப்பீடத்தகவல் தொடர்பகம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றார் என்பதையும் அறிவித்துள்ளது.
மார்ச் 10, திங்கள்கிழமை நடைபெற்ற இரண்டாவது நாள் தவக்கால தியானத்தில் காணொளி வாயிலாக பங்கேற்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்