அன்னை ஓர் அதிசயம் – திருநெல்வேலி தூய அடைக்கல அன்னை ஆலயம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
அன்னை ஓர் அதிசயம் என்ற நமது நிகழ்வில் இன்று நாம் தென்தமிழகத்தின் திருநெல்வேலி டவுனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தூய அடைக்கல அன்னை ஆலயம் பற்றிக் காணலாம்.
அடைக்கலமும் ஆறுதலுமான ஆண்டவரின் தாயாகத் திகழ்பவர் தூய அன்னை மரியா. இறைமகன் இயேசுவை தனது கண்ணின் கருமணியெனக் காத்து அடைக்கலம் கொடுத்தவர். உலகை ஆளும் பரமனின் மைந்தனுக்கே அடைக்கலமாக திகழ்ந்து இவ்வுலக மக்களை காக்கும் அடைக்கல அன்னையாக இன்று வரைத் திகழ்கின்றார். அந்த அன்னையின் அடைக்கலத்தில் அகமகிழ்ந்து வாழவும் அவர்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் நிலைத்து நிற்கவும் ஏராளமான ஆலயங்கள் அன்னை மரியா பெயரில் மக்களால் கட்டப்பட்டுள்ளன. அன்னைக்கு நவநாள்களும், திருப்பலியும் சிறப்பு செப வழிபாடுகளும் இன்று வரை எண்ணற்ற மக்களால் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் அன்னை மரியா மேல் அளவற்ற அன்பும் பாசமும் கொண்ட தமிழ்ப்புலவர் வீரமாமுனிவரின் அருளாலும் அளப்பரிய செயலாலும் தமிழகத்தில் பல்வேறு அன்னை மரியா ஆலயங்கள் உருவாகின. அதிலும் குறிப்பாக அடைக்கல அன்னை மேல் அன்பு கொண்ட வீரமாமுனிவர் தான் பணியாற்றிய இடங்களிலெல்லாம் அடைக்கல அன்னைக்கென தனி சிற்றாலயங்களை தொடக்கத்தில் குடிசையாக அமைத்தார். ஆப்படி உருவானதுதான் இன்று நாம் காண இருக்கும் திருந்லெவேலி டவுணில் உள்ள தூய அடைக்கல அன்னை ஆலயம்.
ஆலய வரலாறு
கி.பி 1650-ஆம் ஆண்டுகளில் புனித பிரான்சிஸ் சவேரியாரின் மறைப்பணி வாயிலாக கிறிஸ்துவை திருநெல்வேலிப் பகுதியில் வாழ்ந்த மக்கள் உணர்ந்து கொண்டனர். இத்தாலியில் பிறந்த காண்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி என்னும் பெயர் கொண்ட வீரமாமுனிவர், கி.பி 1711 ஆம் ஆண்டு காமநாயக்கன்பட்டியில் பங்குத்தந்தையாக பணிபுரிந்தார். அண்டிவருவோருக்கெல்லாம் அடைக்கல தாயாக அன்னை மரியாவை அவர் எடுத்துரைத்தார். அன்னை மரியா குறித்து அவர் எடுத்துரைத்தக் கருத்துக்களை உள்ளன்போடு ஏற்றுக்கொண்ட மக்கள் அன்னையின் திருக்காவலில் தாழ்பணிந்தனர். இதன் விளைவாக வீரமாமுனிவர் தான் கட்டிய குடிசை ஆலயங்களுக்கெல்லாம் அன்னை மரியாவின் பெயரையே சூட்டினார். இதில் ஏலாக்குறிச்சி, வடுகர்பேட்டை, பூண்டி, காமநாயக்கன்பட்டி, ஆலங்குளம் அருகில் உள்ள ஆண்டிப்பட்டி, தஞ்சையில் உள்ள அடைக்கல மாதா ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. வீரமாமுனிவர் தனது பணிக்காலத்தில் நெல்லை டவுன் பகுதியிலும் பணிபுரிந்துள்ளார்.
இந்த வழித்தோன்றலில் நெல்லை மாநகரில் கி.பி 1787 ஆம் ஆண்டு தூய அடைக்கல அன்னைக்கென குடிசை ஆலயம் ஒன்று கட்டப்பட்டது. இந்த ஆலயத்தைச் சுற்றி குறைந்த அளவே கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்ததால் இதனை பராமரிக்க இயலாமல் போகவே, நாளடைவில் ஒரு தம்பதியர் கட்டுப்பாட்டில் தனியார் ஆலயமாக அது விளங்கியது.
கி.பி.1962 ஆம் ஆண்டு பேட்டை பங்குத்தந்தையாகப் பணியாற்றிய இயேசு சபையைச் சார்ந்த அருள்தந்தை ஜார்ஜ் ஜோசப் சே.ச அவர்கள் பணிக்காலத்திலும், 1971 ம் ஆண்டில் பொறுப்பேற்ற அருள்தந்தை மரிய மிக்கேல் பணிக்காலத்திலும் தூய அடைக்கல அன்னை ஆலயத்தை, மறைமாவட்டத்திற்குத் திரும்பப் பெற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. பின்னர் அருள்பணி. எம். அருள் அடிகளார் பணிக்காலத்தில், பல நல்லுள்ளங்களின் இடைவிடாத முயற்சியின் பலனாக கி.பி 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆலயம் மற்றும் நிலம் மறைமாவட்டத்திற்கு இலவசமாக எழுதிக் கொடுக்கப் பட்டது. ஆலயத்தை திறப்பதற்காக கிளைப்பங்குகளின் பெரியவர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டு, அருள்பணி. எம். அருள் அடிகளார் ஆலயத்தி திறந்து வைத்து செபித்தார்கள்.
ஆலயத்தின் சிறப்பு
ஆண்டுகள் பல கடந்த பின்னரும் அடைக்கல அன்னையின் திரு உருவமானது எவ்வித சேதமும் அடையாமல் புன்னகை பூத்த முகமாகவே இருந்தது. ஆலயத்தின் மேற்கு ஒளிவட்டப் பகுதி வழியாக, செப்டம்பர் மாதக் கடைசி சனிக்கிழமை மாதாவின் முகத்தில் ஒளி வந்து விழுமாறு இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. எனவே அந்நிகழ்வைச் சிறப்பிக்கும் பொருட்டு செப்டம்பர் மாதக் கடைசியில் ஆலயத் திருவிழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. அருள்பணி. எம். அருள் அவர்களால் 1982 மார்ச் 28ஆம் நாணன்று ஆலய நிர்வாகம் ஏற்படுத்தப் பட்டது. 1982 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அருள்பணி. லூர்துராஜ் பணிக்காலத்தில் ஆலய முன்புற வாசல்களை விரிவுபடுத்தி புதுப்பித்து திருப்பலி நடத்த வசதியாக மாற்றம் செய்யப்பட்டது. 1983 ஆம் ஆண்டு அடைக்கல அன்னை சிற்றாலயத்தில் பாலர்பள்ளி துவக்கப்பட்டு, 1984 ஆம் ஆண்டு மறைமாவட்ட ஆயர் இருதயராஜ் தலைமையில் முதன் முதலாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 1985 ஆம் ஆண்டு புதிய ஆலயம் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 1986 ஆம் ஆண்டு ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டன. கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 27.12.1987 அன்று மேதகு ஆயர் இருதயராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அதன்பின் 1987 ஆம் ஆண்டு (1787-1987) ஆலயத்தின் 200 -வது ஆண்டாக சிறப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து 12.02.1989 அன்று பேட்டை பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருள்பணி. S. சந்தியாகு அவர்கள் ஊர்நல கமிட்டியை உருவாக்கி, ஊர் பெரியவர்கள் பங்குத்தந்தையோடு இணைந்து பணிசெய்யும் வாய்ப்பை உருவாக்கினார். இவரது பணிக்காலத்தில் முதன்முதலாக திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. 1990 ஆம் ஆண்டு சிறிய கட்டிடம் கட்டப்பட்டு, அசிசி சபை அருள்சகோதரிகளுடன் அடைக்கல அன்னை பாலர்பள்ளி தொடங்கப் பட்டது. 1992 ஆம் ஆண்டு முதல் அருள்பணி. வியானி அவர்களும், 1993 ஆம் ஆண்டு முதல் அருள்பணி. பீட்டர் அடிகளாரும் சிறப்புற பணியாற்றினர். 1999 ஆம் ஆண்டு முதல் அருள்பணி. V. K. S. அருள்ராஜ் அவர்கள் பணிபுரிந்தார்கள். 2002 ஆம் ஆண்டு முதல் பேட்டை பங்கின் முதல் உதவிப் பங்குத்தந்தையாக அருள்பணி. மை. பா. சேசுராஜ் அவர்கள் பொறுப்பேற்று அன்பியங்களை தொடங்கினார்.
2003 ஆம் ஆண்டு பங்குத்தந்தையாக அருள்பணி. சூசை மரியான் அவர்களும், உதவிப் பங்குத்தந்தையாக அருள்பணி. வியாகப்ப ராஜூ அவர்களும் பணியாற்றினர். திருப்பலி பீடம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 2004 ஆம் ஆண்டு அருள்பணி. சகாயராஜன், அருள்பணி. செல்வராஜ் பொறுப்பேற்று, திருவிழாக் காலங்களில் நற்கருணை பவனி ஆரம்பிக்கப்பட்டது. மேலும் பேட்டை பங்கிலிருந்து பிரித்து, நெல்லை டவுன் அடைக்கல மாதா ஆலயத்தை பங்கு ஆலயமாக உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 05.06.2005 அன்று தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. கண்டியபேரி, டவுன் புனித செபஸ்தியார் ஆலயம், டவுன் புனித சவேரியார் ஆலயம், கருப்பன்துறை, லாலுகாபுரம், காந்திநகர், அபிஷேகப்பட்டி, வெள்ளாளன்குளம், சீதபற்றப்பநல்லூர், கருவநல்லூர், உகன்தான்பட்டி ஆகியன இதன் கிளைப்பங்குகளாயின. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. அந்தோணி சேவியர் அவர்கள் பணிப் பொறுப்பேற்றார். பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது. திருவிழாவிற்கு முதன் முதலாக மாதாவிற்கு சப்பரம் எடுத்து வீதியுலா வரச் செய்தார். கிளைப்பங்குகளான டவுன் புனித செபஸ்தியார் ஆலயத்தையும், கருப்பந்துறை புனித வியாகப்பர் ஆலயத்தையும் நற்கருணைப்பேழை -யுடன் புதிதாகக் கட்டினார்.
இரண்டாவது பங்குத்தந்தையாக அருள்பணி. அருள் அம்புரோஸ் அவர்கள் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பொறுப்பேற்று ஆன்மீகப் பாதையில் வழிநடத்தி, 2011 ஆம் ஆண்டு வீரமாமுனிவர் அரங்கம் கட்டினார். 2011 ஆம் ஆண்டு அருள்பணி. அந்தோணி குரூஸ் அவர்கள் பொறுப்பேற்று, இளையோரை ஒருங்கிணைத்து ஊக்குவித்தார். 2012 ஆம் ஆண்டு 74 அடி உயரம் கொண்ட ஒரு மணிக்கோபுரம் கட்டினார். சிற்றாலயம் கட்டப்பட்ட 225 -வது ஆண்டு நினைவாகவும், புதிய ஆலயம் கட்டப்பட்ட 25 -வது ஆண்டு நினைவாகவும் மரியன்னைக்கு முடிசூட்டுதல், அன்னை தெரசா ஆடை தயாரிப்பகம் திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அன்னையின் திருக்காட்சி எழில்மாட திறப்பு, அடைக்கலம் நீயே குறுந்தகடு வெளியீடு ஆகிய ஐம்பெரும் விழாவினை சிறப்பாக நடத்தினார். 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அருள்பணி. மை.பா. சேசுராஜ் அவர்கள் பணிப் பொறுப்பேற்று பங்கை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தி வருகின்றார். (இணையதள உதவி)
இன்று வரை அடைக்கல அன்ன்னையின் அருளால் மக்கள் வளமோடும் நலமோடும் வாழ்ந்து வருகின்றனர். நாமும் அடைக்கல அன்னையின் பாதுகாவலில் நம்மை அர்ப்பணித்து வாழ்வோம். நம்மை அணுகி வரும் துன்ப துயரங்களை எல்லாம் அன்னை மரியா ஏற்று தீர்த்து வழிநடத்த அருள்வேண்டுவோம்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்