MAP

நல்ல சமாரியர் உவமை நல்ல சமாரியர் உவமை  

பொதுக் காலம் 15-ம் ஞாயிறு : நலம்தரும் நல்ல சமாரியர்களாய் வாழ்வோம்!

மனிதரைக் காப்பாற்றுவதா அல்லது சட்டத்தைக் காப்பாற்றுவதா என்ற நெருக்கடியான நிலை ஏற்பட்டபோது, இயேசு மனிதர் பக்கம் நின்று நல்ல சமாரியராயத் திகழ்ந்தார்.
பொதுக் காலம் 15-ம் ஞாயிறு : நலம்தரும் நல்ல சமாரியர்களாய் வாழ்வோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I.  இச 30: 10-14   II. கொலோ 1: 15-20  III. லூக் 10: 25-37))

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள பொன்வெளி கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அங்குள்ள குளத்துக்கு அருகிலிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்க, குழந்தைகளும் பெரியவர்களும் ஊர்க் குளத்தை நோக்கி பதறியடித்துக்கொண்டு ஓடினார்கள். அவர்கள் சத்தம் போட்டதிலிருந்து, அந்தக் குளத்தில் ஒரு குழந்தை விழுந்துவிட்டது என்பதைத் தூரத்தில் இருந்தவர்களாலும் அறிந்துகொள்ள முடிந்தது. அப்போது குளத்தைச் சுற்றி பலரும் நின்று கொண்டிருக்க, சற்றும் யோசிக்காமல் மின்னலெனப் பாய்ந்து குளத்தில் குதித்தார் கல்யாணி என்ற பெண். கரையில் நின்றவர்களின் ஓலம் அதிகமாக, சரசரவென நீந்திச் சென்று குழந்தையைத் தூக்கி ஒரு கையில் பிடித்தபடியே கரைக்கு நீந்தி வந்தார். கரையில் நின்ற பெண்கள் அனைவரும் சேர்ந்து அவர் கரைக்கு வர கைகொடுத்து, குழந்தையையும் கல்யாணியையும் இழுத்துத் தூக்கினார்கள். சுற்றியிருந்தவர்கள், குழந்தையின் தாயைத் திட்டியபடி குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு ஓடினார்கள். ஏற்கெனவே ஒருமுறை அந்தக் குளத்தில் ஒரு குழந்தை விழுந்து இறந்துள்ளது என்பதால், மொத்த கிராமும் பதற்றமாக இருந்தது. இம்முறை, குழந்தை குளத்தில் விழுந்த அடுத்த சில மணித்துளிகளிலேயே மீட்கப்பட்டதால் நல்லவேளையாகக் குழந்தை உயிர் பிழைத்தது.

அந்தக் குளம், எப்படியும் 10, 15 அடி ஆழம் இருக்கும். இந்தக் குளத்துக்குத் தண்ணீர்  வருவதற்கு வழியிருந்தபோதும், வடிகால் வசதி கிடையாது. அதனால்  தண்ணிர் அப்படியே தேங்கிக் கிடக்கும். எல்லா குப்பை, கழிவுகளையும் அப்பகுதி மக்கள் அக்குளத்தில்தான் கொண்டுவந்து கொட்டுவார்கள். அதனால், குழந்தை குளத்தில் விழுந்தபோது சிலர் அதில் குதிப்பதற்குத் தயக்கம் காட்டினார்கள். பலபேர் எனெக்கென்னவென்று ஒதுங்கிக்கொண்டார்கள். ஆனால், கல்யாணி எதைப் பற்றியும் யோசிக்காமல், அக்குளத்தில் குதித்து அந்தக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியபோது அவர் ஒரு சாமியாகவே அனைவருக்கும் தெரிந்தார். கல்யாணிக்கு 2 குழந்தைகள். இவர் ஒன்பதாம் வகுப்புவரைப் படித்திருக்கிறார். பி.காம் படித்துள்ள அவரது கணவர், வேலை கிடைக்காத காரணத்தால் அப்போது கொத்தனார் வேலை செய்து வந்தார்.

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய கல்யாணி, “குழந்தை குளத்துல மூழ்கிக்கிட்டிருந்துச்சு. நாலு விரலு மட்டும் தான் வெளியே தெரிஞ்சது. எல்லாரும் சத்தம் போட்டுக்கிட்டிருக்க, நான் அப்படியே ஓடிப்போய் குதிச்சுட்டேன். குழந்தையைப் பிடித்துத் தூக்கிட்டாலும் என்னால கரைக்கு வர முடியல; புடவை காலுல சிக்கிக்கிட்டு காலை அசைக்க முடியல. நானும் தண்ணிக்குள்ள மூழ்கி நாலுவாய் தண்ணி குடிச்சிட்டேன். அப்போ மனசுல, நமக்கு என்ன ஆனாலும் இந்தச் சின்ன உசுர எப்படியும் காப்பாத்திடணும்னுதான் இருந்துச்சு. எப்படியோ குழந்தைய தூக்கிக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தேன்'' என்றார். தலையில் இடிக்கும் அளவுக்குத் தாழ்வான கூரை வீட்டில்தான் வசிக்கிறார் கல்யாணி. ஒரு பக்கம் வீட்டின் சுவர் இடிந்து, துணி மற்றும் பழைய பேனர்களால் கட்டப்பட்டு மறைக்கப்பட்டிந்தது. கல்யாணியின் வீடு கூரை வீடாக இருந்தாலும், அவரின் இச்செயலால் அப்பகுதி மக்களின் உள்ளங்களில் ஒரு பெண் சமாரியராய் இன்றும் உயர்ந்து நிற்கிறார். பொதுக் காலத்தின் 15-ஆம் ஞாயிற்றுக்கிழமையை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் நலம் பயக்கும் நல்ல சமாரியர்களாய் வாழ்வதற்கு நமக்கு அழைப்பு விடுகின்றன.

உவமையின் பின்புலம்

நல்ல சமாரியர் உவமை ஒத்தமை நற்செய்திகளில் லூக்காவில் மட்டுமே இடம்பெறும் சிறப்புப் பகுதி. இந்நற்செய்தி ‘இரக்கத்தின் நற்செய்தி’ என்று அழைக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம். அதனை எடுத்துக்காட்டும் விதமாக இந்த உவமை அமைந்துள்ளது. இதுபோன்றதொரு நிகழ்வு மாற்கு நற்செய்தியிலும் வருகின்றது. “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசுவிடம் கேள்வியெழுப்பியபோது, அதே பதிலைத்தான் அளிக்கின்றார். ஆனால், "முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வது போல் அடுத்திருப்பவரிடமும் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது” என்று அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” (மாற் 12:28-34) என்று கூறுகின்றார்.

ஆனால் லூக்கா நற்செய்தியில் சற்று மாற்றம் காணப்படுகிறது. இப்போது அப்பகுதியை வாசிப்போம். திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’ என்று எழுதியுள்ளது” என்றார். இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றார். மாற்கு நற்செய்தியில் மறைநூல் அறிஞருக்கு இயேசு அளித்த பதிலை இங்கே திருச்சட்ட அறிஞரே அளித்துவிடுகிறார். அதனால்தான் அந்தக் கட்டளைப்படி வாழும்படி அவருக்கு அறிவுறுத்துகிறார் இயேசு. ஆனால், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் அவர் எதிர்க்கேள்வி கேட்டபோதுதான், அவரது அறிவுக்கு உறைக்கும்படி இந்த உவமையை எடுத்துரைக்கின்றார் இயேசு.

திருச்சட்ட அறிஞர், “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்ற கேள்வியை ஏன் எழுப்புகின்றார் என்பது குறித்தும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். இஸ்ரேல் மக்கள் எகிப்தில் வாழ்ந்தபோது, பிற இனத்தவரிடம் கொடுக்கல் வாங்களோ, திருமண கலப்போ இல்லாத ஒரு தனி இனமாகவே வாழ்ந்தனர். பின்னர் எகிப்தியரால் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டபோது பிற இனத்தவர்மேல் காழ்ப்புணர்வும் கோபமும் கொள்ளத் தொடங்கினர். மேலும் ‘தனித்து வாழ்வதே இறைவனின் விருப்பம்’ என்றும் அவர்கள் தவறான எண்ணம் கொண்டிருந்தனர். ஆனால் அதேவேளையில் கடவுள் எல்லாருக்கும் உரியவர், அவர்களையும் அவர் அன்பு செய்பவர் என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். எடுத்துக்காட்டாக, பிற இனத்தவர் மீது கடவுள் கொள்ளும் பேரன்பை பழைய ஏற்பாட்டு நூல்களில் பார்க்கின்றோம். இருந்தபோதிலும், தங்கள் பாசத்திற்கும், கொடுக்கல் வாங்கல் மற்றும் திருமண உறவுகளுக்கும் அடுத்தவர் என்ற உரிமை நிலைக்குரியவர் இஸ்ரயேல் மக்கள் மட்டுமே என்ற எண்ணமே அவர்களிடம் மேலோங்கி இருந்தது. மேலும் ஓர் இஸ்ரயேலருக்கு கடன் கொடுத்தால் வட்டி வாங்கக்கூடாது என்றும், அதேவேளையில், வேற்று நாட்டவருக்குக் கடன் கொடுத்தால் வட்டி வாங்கிக்கொள்ளலாம் என்றும் தவறான எண்ணங்களையும் அவர்கள் தங்களுக்குள் வளர்த்துக்கொண்டனர். இதனை நியாயம்படுத்தும் விதமாக, சட்டங்களை தங்கள் வசதிக்கேற்றவாறு மாற்றி எழுதிக்கொண்டனர் (காண்க. இச 15)

இயேசுவுடன் திருச்சட்ட அறிஞர் உரையாடும் காட்சி
இயேசுவுடன் திருச்சட்ட அறிஞர் உரையாடும் காட்சி

உவமையின் பொருள்

இயேசு கூறும் இந்த உவமையில் மூன்று நபர்கள் முன்னிறுத்தப்படுகின்றனர். முதலாவது நபர் குரு. இவர் அடிபட்டவரைக் கண்டதும் வேறுபக்கமாக விலகிச் செல்கின்றார். இரண்டாம் நபர் லேவியர். இவரும் குருவைப் போலவே வேறுபக்கமாக விலகிச் செல்கின்றார். மூன்றாம் நபர்  சமாரியர். இவர், அடிப்பட்டவரை சாவடிக்குக் கொண்டு சென்று அவர் உயிரைக் காப்பாற்றுகிறார். இம்மூவரில் மூன்றாம் நபரைத்தான் இயேசு உண்மைக் கதாநாயகனாகப் போற்றுகின்றார். இங்கே, குருவும், லேவியரும் செய்த செயல் சட்டப்படி குற்றமாகாது. காரணம், யூத மதச் சட்டப்படி, இறந்த ஒருவரையோ அல்லது அடிபட்டு, இரத்தக் காயங்களோடு கிடக்கும் ஒருவரையோ, தொடவோ, அல்லது அவரருகில் செல்லவோ கூடாது. அதைத்தான் அவர்கள் செய்தார்கள். ஆனால், அவர்கள் இருவரும் சட்டத்தைக் காட்டிலும் மனித மாண்பிற்குத்தான், அதாவது, ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால்,  அவர்கள் அதைச் செய்யவில்லை. சட்டத்தைக் காரணம் காட்டி தங்கள் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்கின்றனர்.

இயேசுவின் வாழ்வில், ஓய்வு நாளில் அவர் செய்த அருளடையாளங்களே அவருக்கு  எதிர்ப்பைக் கொணர்ந்தன. அதற்காக அவர் மனம் தளரவில்லை. அவற்றைச் செய்வதில் அவர் துணிவோடு இருந்தார். மனிதரைக் காப்பாற்றுவதா அல்லது சட்டத்தைக் காப்பாற்றுவதா என்ற நெருக்கடியான நிலை ஏற்பட்டபோது, இயேசு மனிதர் பக்கம்தான் நின்றார். மனிதத்தைக் காப்பாற்றுவதற்காக அவர் எல்லை தாண்டினார். எடுத்துக்காட்டாக, ஓய்வு நாளில் இயேசு தொழுகைக் கூடத்திற்குள் சென்று கற்பித்தபோது, வலக்கை சூம்பிய ஒருவரைக் குணப்படுத்துகிறார். அப்போது, இது குறித்து மறைநூல் அறிஞரும், பரிசேயரும் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர். சட்டத்தைக் காட்டி மனிதத்தை மாய்க்கும் அவர்களின் தீய எண்ணத்தை அறிந்த இயேசு, அவர்களை நோக்கி, “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார். பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, “உமது கையை நீட்டும்!” என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது (லூக் 6:9-10). மேலும், “ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” (மாற் 2:27) என்றும் ஆணித்தரமாக  எடுத்துக்காட்டுகின்றார் இயேசு.

அடுத்து இயேசு கூறும் இந்த உவமையில் அவர் சமாரியரை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்காட்டியதற்குக் காரணம் உண்டு. பொதுவாக, சமாரியர்களும் யூதர்கள்தாம். அசீரியர்களோடு திருமண உறவு கொண்டு தங்கள் தூய்மையை இழந்துவிட்ட யூதர்களே அவர்கள் ‘சமாரியர்கள்’ என அழைக்கப்பட்டனர் (2 அர 17:6, 24). இதன்காரணமாக, சமாரியர்கள், யூதச் சமுதாயத்திலுள்ள பரிசேயர், சதுசேயர், மூப்பர்கள், மறைநூல் அறிஞர்கள், தலைமைக் குருக்கள் என அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு வந்தனர். இந்த யூதத் தலைவர்கள் அனைவரும் மனிதர்களைக் காட்டிலும் சட்டங்களுக்கும் பலியிடுதலுக்கும் மட்டுமே அதிமுக்கியத்துவம் கொடுத்து வந்தனர். அவர்களின் அணுகுமுறை தவறானது என்பதை எடுத்துக்காட்டவே ஒரு சமாரியரை உண்மைக் கதாநாயகனாக முன்னிறுத்துகின்றார் இயேசு. மேலும், பத்துத் தொழுநோயாளர்கள் நோய் நீங்கப்பெறுதல் நிகழ்விலும், ஒரு சமாரியரே முக்கியத்துவம் பெறுகிறார். (லூக் 17:15-19). மேலும் கடவுளின் சட்டம் அனைவரும் ஒன்றித்து வாழ வேண்டும் என்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறது இதைத்தான் இன்றைய முதல் வாசகமும் மொழிகிறது. அவ்வாறே, "சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்" என்று இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடியார் கூறுகின்றார். ஆகவே, சட்டத்தைக் காரணம் காட்டி மனிதத்தை மாய்ந்துபோகச் செய்துவிடக் கூடாது என்பதை எப்போதும் நம் மனங்களில் நிறுத்த  வேண்டும்.

கடந்த 2015-ஆம் ஆண்டு, A New Zealand Sikh put religion aside and took off his turban to help an injured child என்ற தலைப்பில், New Zealand Herald என்ற பத்திரிக்கையில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. ஐந்து வயதே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று வீட்டிற்கு வெளியே கார் மோதி விபத்திற்குள்ளானது. அக்குழந்தைக்குத் தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த 22 வயது நிரம்பிய Harman Singh என்ற சீக்கிய மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட்டென தன் தலையில் கட்டியிருந்த தலைப்பாகையைக் கழட்டி இரத்தம் வடிந்துகொண்டிருந்த அக்குழந்தையின் தலைக்குக் கீழ் தலையணையாக வைத்துப் பிடித்துக்கொண்டார். அதன்பிறகு அக்குழந்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடனே அவ்விளைஞர் செய்த இச்செயல் காட்டுத்தீயாய் உலகெங்கினும் பரவத் தொடங்கியது. காரணம், சீக்கிய மதத்தவர் எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் தலைப்பாகையைக் கழட்ட மாட்டார்கள். இது அவர்களின் மதச் சட்டம். ஆனால், இவ்விளைஞரோ அதனைக் கடந்து சென்று அக்குழந்தைக்கு உதவியுள்ளார். இதுகுறித்து அவர் New Zealand Herald பத்திரிக்கை நிரூபரிடம், "நான் விபத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருதபோது, தலைப்பாகைக் குறித்து நினைக்கவில்லை அக்குழந்தைக்கு இரத்தப்போக்கு இருப்பதால் தலையில் வைத்துக்கொள்ள ஏதாவது தேவை என்றுதான் நினைத்தேன். அதுதான் என் வேலை. மேலும் ஆபத்துக் காலங்களில் இதுபோன்று உதவுவதற்கு எங்கள் மதச் சட்டத்தில் விதிவிலக்கு உள்ளது என்று பணிவோடு கூறிவிட்டுப் போய்விட்டார். இவரின் எல்லை கடந்த இந்தப் புதிய அன்புச் செயலுக்கு இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் சீக்கியர்களும், இன்னும் பலரும் இவரைப் பாராட்டினர்.

அன்றுமட்டுமல்ல, இன்றும் கூட, மதச் சட்டங்களின் பெயரால் மனிதம் தொடர்ந்து சிதைக்கப்பட்டுக்கொண்டுதான் வருகின்றது. ஆனால், இதுபோன்ற நெருக்கடியான வேளைகளில் நாம் எல்லை கடந்து செயல்பட வேண்டும் என்பதைத்தான் இயேசு நமக்கு எடுத்துக்காட்டுகின்றார். ஆகவே, சாதி, மதம், இனம், மொழி, நாடு, கலாச்சாரம், பண்பாடு, இருப்பவர், இல்லாதவர் என, மனிதத்தைக் கூறுபோடும் வேறுபாடுகளைக் களைந்துவிட்டு நமக்கு அடுத்திருப்போருக்கு இரக்கம் காட்டுவோம். நானிலமெங்கும் நல்ல சமாரியர்களாய் நலம் தருவோம் அதற்கான அருள்வரங்களை ஆண்டவரிடம் இந்நாளில் கேட்டு மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 ஜூலை 2025, 12:12