ஞாயிறு சிந்தனை : அர்ப்பணிக்கத் தூண்டும் அன்புக் கட்டளை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. திப 14: 21b-27 II. திவெ 21: 1-5, III. யோவா 13:31-33a,34-35)
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இயேசுவின் அன்புக் கட்டளைக்குச் சான்றுபகர நம்மை அழைக்கின்றன. ஒரு குருவிடம் இரண்டு சீடர்கள் இருந்தனர். தங்களுக்குள் யார் தலைமைக்குருவை அன்புசெய்யும் உண்மையானச் சீடர் என்பதில் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இப்பிரச்சனை குருவிடம் சென்றது. அவர் அவர்களிடம், “சீடர்களே! இன்று ஏனோ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது. சமையல் முடிய தாமதமாகும்போல் தெரிகிறது. ஆகவே, இரண்டு பேரும் அதோ அந்த மரத்தில் இருக்கும் பழங்களைப் பறித்து வாருங்கள்” என்றார். உடனே அந்தச் சீடர்கள் இருவரும் மரத்தை நோக்கி ஓடினர். ஆனால் மரத்தை நெருங்க முடியாத அளவிற்கு அங்கே முள்செடிகள் சுற்றி நின்றன. முதல் சீடர் சற்று பின்னோக்கி வந்தார். பின்னர் முன்னோக்கி வேகமாக ஓடினார். ஒரே தாண்டில் மரத்தைத் தொட்டார். பழங்களை முடிந்தளவுக்குப் பறித்தார். மீண்டும் ஒரே தாவில் குருவின் முன்னால் வந்து நின்று, “பார்த்தீர்களா குருவே! நீங்கள் கேட்டதை கணநேரத்தில் கொண்டு வந்து விட்டேன். ஆகவே, நானே உங்களை அன்பு செய்யும் உண்மைச் சீடன்” என்றார் தற்பெருமையோடு.
இரண்டாமவர் ஒர் அரிவாளை எடுத்து வந்தார். முள்செடிகளை வெட்டி அகற்றி ஒரு பாதை அமைத்தார். அப்போது அங்கே அலுப்போடு வந்த சில வழிப்போக்கர்கள் அந்தப் பாதை வழியே சென்று, பழங்களைப் பறித்துச் சாப்பிட்டு பசியாறினர். பின்னர் மரத்தடியில் படுத்து சற்றுநேரம் இளைப்பாறிவிட்டுச் சென்றனர். அச்சீடரும் தேவையான அளவுக்குப் பழங்களைப் பறித்து வந்து தன் குருவிடம் கொடுத்தார். இப்போது குரு முதல் சீடரிடம், “இரண்டாவது சீடர்தான் என்னை உண்மையில் அன்பு செய்வதற்கான செயல்களைச் செய்திருக்கிறார்” என்றார். உடனே முதலாமவர் மிகவும் கோபமடைந்து, “குருவே, இன்னும் நீங்கள் போட்டியைத் தொடங்கவே இல்லையே, அதற்குள் அவரை எப்படி சிறந்தவர் என்று கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்தக் குரு அவரிடம், “சீடரே, நான் பழம் பறிக்கச் சொன்னதே ஒரு வகை போட்டிதானே! நீ மரத்தருகே தாவிக்குதித்து, பழத்தைப் பறித்தது சுயநலத்தையே காட்டுகிறது. ஏனெனில், அதை எனக்கு மட்டுமே உண்ணக் கொடுத்தாய். நான் மட்டுமே பலன் அடைந்தேன். ஆனால் இரண்டாம் சீடரோ, முள்ளான பாதையைச் சீரமைத்ததால், எனக்கு மட்டுமின்றி ஊராருக்கும், வழிப்போக்கருக்கும் பழங்கள் கிடைக்கும்படிச் செய்தார். தனது பரந்துபட்ட அன்பால் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்பவரே என் கட்டளையை உண்மையாகக் கடைபிடிக்கும் துறவியாவார்” என்றார் குரு.
இன்றைய நற்செய்தி இயேசு தரும் அன்பின் கட்டளைக் குறித்துப் பேசுகிறது. “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” என்று கூறுகின்றார் இயேசு. அவர் கூறும் இந்தப் புதிய கட்டளைப் பற்றி ஒத்தமை நற்செய்தியாளர்கள் மூவரும் கூறாத நிலையில் யோவான் நற்செய்தியாளர் மட்டுமே இதுகுறித்துக் குறிப்பிடுகின்றார். இயேசு கூறுவது புதிய கட்டளை என்பதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? எடுத்துக்காட்டாக, கடவுளையும், பிறரையும், தன்னையும் எப்படி அன்பு செய்யவேண்டும் என்று திருச்சட்ட அறிஞருக்கு மோசேயின் சட்டத்திலிருந்து பழைய கட்டளைகளை எடுத்துக்காட்டுகிறார் இயேசு (காண்க. மாற் 12: 28-31). மேலும், இவை இரண்டும்தான் முதன்மையான கட்டளை என்றும் உரைக்கின்றார். ஆனால் இந்த முதன்மையான கட்டளையில் பிறர் அன்புக் கட்டளையை உட்புகுத்துகிறார் இயேசு. கடவுள் அன்பு, பிறர் அன்பு ஆகிய இரண்டு கட்டளைகளையும் குறித்து இயேசுவுக்கு முன்பு எந்த மறைநூல் அறிஞரும் பேசியதில்லை. காரணம், அவர்களுக்குப் பிறர் அன்புக் கட்டளையைக் காட்டிலும் கடவுளை அன்பு செய்யும் கட்டளைதான் மிகவும் முக்கியமாகப்பட்டது. ஆனால் இயேசு இவை இரண்டையும் இணைத்து கடவுளின் திருவுளத்தை வெளிப்படுத்துகிறார்.
பழைய கட்டளையில் "உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!" (லேவி 19:18) என்று சொல்லப்பட்டிருகிறது. இங்கே ‘அடுத்திருப்பவர்’ என்பது இஸ்ரயேல் இனத்திலுள்ள அடுத்திருப்பவரையே குறிக்கிறது. அதாவது, கடவுளின் மக்களாகிய இஸ்ரயேல் இனத்தவர் தம் இனத்தவர் யாவரையும் அன்புசெய்ய வேண்டும் என்றே இக்கட்டளைப் பணிக்கிறது. மேலும் தம் இனத்திற்குப் புறம்பே உள்ள மற்ற இனத்தவர் பற்றி இங்குக் குறிப்பிடவில்லை. ஆக, பழைய ஏற்பாட்டின் இந்த அன்புச் சட்டம் குறுகிய எல்லையைக் கொண்டது என்பது மிகவும் தெளிவாகிறது. ஆனால் “நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” என்று இயேசு தரும் புதிய கட்டளை பரந்துவிரிந்ததொரு பார்வையைக் கொண்டது. பழைய கட்டளையில், “அடுத்திருப்பவர்” என்பது அருகில் இருப்பவர், பக்கத்தில் இருப்பவர், சற்று தொலைவில் இருப்பவர் என்ற அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஆனால் புதிய கட்டளையில், ‘மற்றவரிடம்’ என்பது, பிறரிடமும், எல்லாரிடமும் என்ற தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளது. மேலும் ‘மற்றவரிடம்’ என்பது சாதி, மதம், இனம், மொழி, நாடு என எல்லை கடந்து அனைத்து மக்களையும் அன்பு செய்வது மற்றும் அவர்களுக்காகப் பணியாற்றுவது என்பதை அர்த்தப்படுத்துகிறது. இயேசு, தான் கூறிய இந்தப் புதிய கட்டளையைத் தனது பணிவாழ்வு முழுதும் நிறைவேற்றினார். மேலும், அவரின் இந்தப் புதிய கட்டளை கிறிஸ்தவர்களை மட்டுமே அன்பு செய்ய நம்மைப் பணிக்கவில்லை, மாறாக, வறியவர், துன்புறுத்தப்பட்டோர், துயருற்றோர், புறக்கணிக்கப்பட்டோர், அடிமைப்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர், உரிமையிழந்தோர், உடல் உள்ள ஊனமுற்றோர், ஆன்மிகப் பலமிழந்தோர் ஆகிய அனைவரையும் அன்பு செய்யவும், அவர்களுக்காகப் பணியாற்றவும், அவர்களை இறையாட்சிக்குக் கொண்டு வரவும் பணிக்கிறது.
சவால் நிறைந்த புதிய கட்டளை
இறுதியாக, “நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” என்றும் உரைக்கின்றார் இயேசு. அப்படியென்றால், இயேசுவின் அன்பு எத்தகையது என்பதைச் சற்று ஆழமாக நாம் சிந்திக்க வேண்டும். இயேசுவின் அன்பு பாவிகளை ஏற்றுக்கொண்டது, பாதங்களைக் கழுவியது, ஏழையருக்கு ஏணியாய் அமைந்தது, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோரை மையநிலைக்குக் கொண்டுவந்தது, ஆணாதிக்கத்தை வேரறுத்து பெண்மையைப் போற்றியது, தரணியில் தாய்மையை தலைநிமிரச் செய்தது, வேற்றுமையை வேரறுத்து ஒன்றிப்பை வளர்த்தது, மன்னிப்பு வழங்கி மனித மாண்பை வெளிப்படுத்தியது, பொய்மையை அகற்றி உண்மையை நிலைநிறுத்தியது, தன்னலம் அகற்றி பொதுநலம் போற்றியது, சிலுவைமட்டும் தன்னை தாழ்த்திக்கொண்டது, மானிடரின் மீட்புக்காய் மரணத்தைத் தழுவியது, சாவை வென்று உயிர்ப்பைக் கண்டது. ஆக, இத்தகைய உயர்ந்த இறையாட்சி விழுமியங்களை உள்ளடக்கியதுதான் இயேசுவின் இந்தப் புதிய கட்டளை. அப்படியெனில், அவரின் இந்தப் புதிய கட்டளைப்படி வாழ்வது உண்மையிலேயே சவால் நிறைந்தது, சாவைத் தழுவிக்கொள்ளும் நிலைக்கு அது நம்மை உட்படுத்தக் கூடியது. ஆகவேதான், உயிர்த்த ஆண்டவரைக் கண்டுகொண்ட பிறகே, அவர் கூறிய இந்தப் புதிய கடடளையின் உண்மைப் பொருளை சீடர்களால் புரிந்துகொள்ள முடிந்தது. இதன் காரணமாக, உயிர்த்த ஆண்டவருக்காக அவர்கள் எத்துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளவும், தங்கள் இன்னுயிரை இழக்கவும் தயாராய் இருந்தனர். இன்றைய முதல் வாசகத்தில், லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வரும் பவுலும் பர்னபாவும் அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்தி, “நாம் பலவேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்” என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவிப்பதைப் பார்க்கின்றோம்.
புதிய கட்டளையைக் கடைபிடிப்போருக்கான பரிசு
சவால் நிறைந்த இயேசுவின் இந்தப் புதிய கட்டளையைக் கடைபிடிக்கும் நோக்கில் இயேசுவின் சீடர்களைப் போன்று எண்ணற்றோர் சொல்லொண்ணா துயரங்களை ஏற்று அவருக்காகக் கொல்லப்பட்டு மறைச்சட்சியர் நிலைக்கு உயர்ந்தனர். இப்படிப்பட்டோருக்கு எப்படிப்பட்ட தூய வாழ்வு கிடைக்கும் என்பதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்துக்காட்டுகின்றார் புனித யோவான். பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, “இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன” என்றது.
ஒருநாள் குருவும் அவரது சீடர் ஒருவரும் குளக்கரையில் அமர்ந்திருந்தனர். அவ்வேளையில், அச்சீடர் பல கேள்விகளை குருவிடம் கேட்டுக் கொண்டிருந்தார். குருவும் நிதானமாகப் பதிலளித்துக் கொண்டிருந்தார். "குருவே! சுயநலமான அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் என்ன வேறுபாடு? எனக்குக் கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்" என்றார். அவருக்கு எப்படி விளக்குவது என்று சுற்றும் முற்றும் பார்த்தார் குரு. அப்போது இளைஞர் ஒருவர் குளக்கரையில் தூண்டிலைக் கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்திருந்தார். அவரருகில் கூடையில் அவர் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தன. அங்குச் சென்ற குரு அந்த இளைஞரிடம் பேச்சுக் கொடுத்தார். "தம்பி! மீன் என்றால் உனக்கு ரொம்ப பிடிக்குமோ?" என்று கேட்டார். அவரும் "ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர். பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்லி ஒரு பிடி பிடிக்கப் போகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் குளத்தில் நிறைய மீன்கள் உள்ளன” என்றார் அவ்விளைஞர்.
குருவோ, "எனக்கு வேண்டாம் தம்பி!" என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்துவிட்டார். நடப்பதையெல்லாம் அச்சீடர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த இளைஞரும் சிறிது நேரத்தில் மீன் பிடித்து விட்டு கிளம்பிப் போய்விட்டார். சற்றுநேரத்தில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் குளக்கரையை நோக்கி வருவதை குரு பார்த்துவிட்டார். அவர் கையில் ஒரு வெள்ளை நிறப் பை இருந்தது. குரு அதை உற்றுப் பார்த்தார்; அது பையின் நிறமல்ல, அதிலிருக்கும் பொரியின் நிறம் என்பதைத் தெரிந்து கொண்டார். அந்தப் பெரியவர் குளக்கரையில் வந்து அமர்ந்தார். பையிலிருந்த பொரியை எடுத்து தண்ணீரில் தூவினார். நூற்றுக்கணக்கான மீன்கள் பொரி இருக்கும் இடத்தை எறும்புகள் போல மொய்த்தன. குரு அவரிடமும் சென்று பேச்சுக் கொடுத்தார். "என்ன பெரியவரே! மீன் என்றால் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ?" என்று சற்றுமுன் அந்த இளைஞரிடம் கேட்ட அதே கேள்வியை அவரிடமும் கேட்டார். பெரியவரும், "ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர்; நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து மீன்களுக்கு உணவளிப்பதை நான் வழக்கமாகக் கொண்டுள்ளேன்" என்றார். அவரிடம் பேசிமுடித்துவிட்டு குரு சீடரின் பக்கம் திரும்பினார். "பார்த்தாயா! இருவரும் மீனின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது, அவர்கள் 'மீனென்றால் உயிர்' என்று கூறியபோதே உனக்குத் தெரிந்திருக்கும். அந்த இளைஞர், மீன்களை 'ருசி' என்னும் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டார். அவர் தன்னுடைய மகிழ்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஆனால் அந்தப் பெரியவர் மீன்கள் பசியாறுவதற்கு சுயநலமில்லாமல் உணவளித்தார். இருவருக்குமே மீன்கள் பிடித்திருந்தது, ஆனால் இருவரின் நோக்கமும் வேறு வேறு. மொத்தத்தில், அன்பில் சுயநலம் இருந்தால் அது அன்பே இல்லை. சுயநலமில்லாத அன்புதான் உண்மையானது, நிரந்தரமானது, உலகுக்குத் தேவையானது" என்று குரு சீடருக்குப் புரிய வைத்தார்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு (குறள் 72) என்ற குறளில், அன்பு இல்லாத நெஞ்சத்தை உடையவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமையாக்கிக் கொண்டு வாழ்வர். ஆனால் அன்புள்ளம் கொண்டவரோ தன் உடம்பையும் பிறருக்கு உரிமையாக்கி மகிழ்ந்து வாழ்வர் என்கிறார் வள்ளுவர். வன்முறை, நீதி, அன்பு ஆகிய மூன்றும் இவ்வுலகை எப்போதும் ஆட்சி செய்கின்றன. ‘என்னிடம் இருப்பவை மட்டுமல்ல உன்னிடம் இருப்பதும் எனக்கே சொந்தம். நீ அதைக் கொடுக்கவில்லையென்றால் உன்னைக் கொன்றுவிடுவேன்’ என்கிறது வன்முறை. ‘என்னிடம் இருப்பதெல்லாம் எனக்குச் சொந்தம், உன்னிடம் இருப்பதெல்லாம் உனக்குச் சொந்தம். உன்னுடைய பொருளுக்கு நான் ஆசைப்படமாட்டேன், என்னுடைய பொருளுக்கு நீ ஆசைப்படக் கூடாது’ என்கிறது நீதி. ஆனால், ‘உன்னுடையதெல்லாம் உனக்கே சொந்தம், என்னுடையதும் உனக்கே சொந்தம், நானும் உனக்கே சொந்தம், எல்லாவற்றையும் எடுத்துக்கொள்’ என்கிறது அன்பு. ஆம், உண்மையான அன்பு மட்டுமே எப்பொழுதும் எல்லாவற்றையும் பிறருக்காக இழக்கத் தயாராக இருக்கிறது. ஆகவே, இத்தகைய உண்மை அன்பை உள்ளடக்கியிருக்கும் கிறிஸ்துவின் புதிய கட்டளையை நாமும் அணிந்துகொள்வோம். அதனை அனுதினமும் வாழ்ந்து காட்டுவோம். அதற்கான அருளை ஆண்டவரிடம் கேட்டு மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்