மதங்களுக்கிடையே உறவுப் பாலங்கள் ஏற்படுத்துவது குறித்த கூட்டம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஏப்ரல் 8 மற்றும் 9 தேதிகளில் உரோமையிலுள்ள அந்தோணியானும் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், சமூக ஒற்றுமை மற்றும் காலநிலை நீதியை மேம்படுத்துவதற்கு மதங்கள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதில் முக்கிய கவனம் செலுத்தும் விதமாகக் கூட்டம் ஒன்று உரோமையில் நடைபெற்றது.
"பொதுவான எல்லைகள் - ஐரோப்பாவில் சமூக ஒற்றுமை மற்றும் காலநிலை நீதிக்கான மதங்களுக்கு இடையிலான பாதைகள்" என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் முக்கிய பேச்சாளர்கள் நம்பிக்கை மற்றும் உலகளாவியப் பிரச்சனைகளின் நிலை குறித்து விவாதித்தனர்.
இக்கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு அவர்கள், தொழில்நுட்பக் கருத்தியலை சவால் செய்யும் மற்றும் கிரகத்தின் மற்றும் மனிதகுலத்தின் தேவைகளை நிவர்த்தி செய்யும் ஆன்மிகம் மற்றும் வாழ்க்கை முறையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
மத மற்றும் மதச்சார்பற்ற நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டிய, அனைத்துலக உரையாடல் மையத்தின் (KAICIID) தற்காலிகப் பொதுச் செயலாளர் அன்டோனியோ டி அல்மெய்டா-ரிபேரோ அவர்கள், மதங்கள் ஆழமான சமூக வலைப்பின்னல்களையும் அறிவாற்றலையும் வழங்குகின்றன என்றும், மேலும் கொள்கை வகுப்பாளர்கள் இந்த உள்ளுணர்வுகளை கொள்கைகளாக மாற்றுகிறார்கள் என்றும் எடுத்துக்காட்டினார்.
மேலும் இந்தக் கூட்டத்தில், சமூகங்களை ஆதரிப்பதில், குறிப்பாக தனிமையை எதிர்த்துப் போராடுவதில், நார்வே லூத்தரன் திருச்சபையின் பங்களிப்பைக் குறித்து அதன் ஆயர் Kari Mangrud Alvsvåg அவர்கள் விவாதித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்