தவக்காலம் இரண்டாம் ஞாயிறு : உடைபடுவோம் உருமாறுவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. தொநூ 15: 5-12, 17-18, 21 b II. பிலி 3: 17-4:1; III. லூக் 9: 28b-36)
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய இறைவார்த்தைகள் பிறருக்காக நம்மை உருமாற்ற (தோற்றம் மாற) அழைக்கின்றன. ஒவ்வொரு மனிதருடைய வாழ்விலும் இந்த உருமாற்றம் என்பது நிகழத்தான் செய்கிறது. ஆனால் இந்த உருமாற்றம் பிறருக்காகவும் இந்தச் சமுதாயத்தின் நலன்களுக்காகவும் அமைகின்றபோது அது இன்னும் மேன்மை பெறுகிறது. அதாவது, கிறிஸ்தவர்களாகிய நாம் சிலுவைகளைச் சுமக்காமல் உயிர்ப்பு விழாக்களைக் கொண்டாட முடியாது என்பதைச் சுருங்கச் சொல்கின்றது இந்த உருமாற்ற நிகழ்வு. உருமாற்றம் பெற மனமில்லாதவர் உருவாகவும் முடியாது பிறரை உருவாக்கவும் முடியாது என்பது திண்ணம். சிற்பி ஒருவர் கோவிலின் கருவறையில் வைப்பதற்குச் சிலை ஒன்றைச் செதுக்க விரும்பினார். அவர் தனது தேடலில் இரண்டு பெரிய பாறைத் துண்டுகளைக் கண்டுபிடித்தார். அவற்றில் ஒன்றைச் சிலையாகவும், மற்றொன்றை அச்சிலையை வணங்க வரும் பக்தர்கள் ஏறிச்செல்லும் படிகளாகவும் செதுக்க விரும்பினார். அவர் முதல் பாறையை உடைத்து செதுக்க விருப்பியபோது, “நான் கோவிலின் சிலையாக இருக்க விரும்பவில்லை, ஏனென்றால், சிலையாகச் செதுக்கப்பட நான் அதிகமாக உடைபடவேண்டியிருக்கும். என்னால் அவ்வளவு வலிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே, பக்தர்கள் ஏறிவரும் படிக்கட்டாகவே நான் இருக்க விரும்புகிறேன், அதுதான் எனக்கும் சரியெனப்படுகிறது. ஆகவே, தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள் ஐயா” என்று கூறியது அந்த முதல் பாறை. அப்போது பக்கத்தில் இருந்த இரண்டாவது பாறை, “ஐயா, வேண்டுமானால் என்னைச் சிலையாகச் செதுக்குங்கள், நான் எல்லா வலிகளையும் தாங்கிகொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று கூறியது. உடனே அச்சிற்பி இரண்டாவது பாறையைச் சிலையாகவும், முதல் பாறையைப் படிக்கட்டுகளாகவும் செதுக்கினார். பின்னர் இரண்டும் கோவிலில் வைக்கப்பட்டன. அப்போது சிலையாகச் செதுக்கப்பட்ட இரண்டாவது பாறை பக்தர்களுக்கு ஆசீர் வழங்கி, அவர்களிடமிருந்து மிகுந்த மதிப்பையும் மரியாதையையும் பெற்று மகிழ்ச்சியில் திளைத்தது. அது, தான் உடைபடத் தயாராய் இருந்ததற்கான வெகுமதியைப் பெற்றுக்கொண்டது. ஆனால் அதிகம் உடைபட மறுத்த முதல் பாறை, பக்தர்களின் காலடிகளில் மிதிவாங்கி அழுதுக் கதறியது. அப்போது அங்கு வந்த சிற்பி, ‘உடைபட (உருமாற) மறுப்பவர் உவகையடைய முடியாது’ என்று கூறிவிட்டுச் சென்றார்.
இயேசுவின் உருமாற்றம் தரும் செய்தி
லூக்கா நற்செய்தியிலிருந்து இயேசு தோற்றம் மாறுதல் பெறும் நிகழ்வு இன்று நமது சிந்தனைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு குறித்து ஒத்தமை நற்செய்தியாளர்கள் மூவருமே கூறியுள்ளனர் (காண்க மத் 17:1-8; மாற் 9:2-13; லூக் 9:28-36). இவற்றுள் சில வேறுபாடுகள் இருப்பினும், இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை, இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தல் ஆகிய இரண்டு நிகழ்வுகளுக்குப் பிறகே இயேசுவின் இந்தத் தோற்றம் மாறுதல் இடம்பெறுவதாக மூவருமே ஒரேமாதிரியாகப் பதிவுசெய்துள்ளனர். ஆனாலும் மத்தேயுவும் மாற்கும் ஆறு நாள்களுக்குப் பின்பும், லூக்கா எட்டு நாள்களுக்குப் பின்பும் இந்நிகழ்வு இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் மாற்கும் லூக்காவும் இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்திலேயே இந்நிகழ்வு இடம்பெறுவதாகவும், ஆனால் மத்தேயு அவரதுப் பணிவாழ்வின் இறுதியில் நிகழ்வதாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கையும், இயேசுவின் தோற்றம் மாறுதல் நிகழ்வும் வரலாற்று ஆதாரம் மிகுந்தவை என்றும் விவிலிய அறிஞர்களால் எடுத்துக்காட்டப்படுகிறது.
இயேசு, மோசே, எலியா ஆகிய மூவரின் சந்திப்பில் எருசலேமில் நிகழப்போகும் இயேசுவின் தியாக மரணம் குறித்து கலந்துரையாடல் நடப்பதாக லூக்கா கூறுகின்றார். இங்கே, மோசே திருச்சட்டங்களின் அடையாளமாகவும், எலியா இறைவாக்கினர்களின் அடையாளமாகவும், இயேசு திருச்சட்டங்கள் மற்றும் இறைவாக்கினர்களின் ஒட்டுமொத்த அடையாளமாகவும் எடுத்துக்காட்டப்படுகின்றனர். இந்நிகழ்விற்குப் பிறகு இயேசு நாசரேத்துக்கு மீண்டும் வருவதாகக் காட்டப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், இதுதான் எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணமாக அமைகின்றது. இரண்டாவதாக, இயேசுவின் திருமுழுக்கின்போது வெளிப்பட்ட இறைத்தந்தையின் குரல் இங்கு மீண்டும் ஒலிக்கிறது. இயேசுவின் மீட்புத் திட்டத்தில் தந்தையின் உடனிருப்பை எடுத்துக்காட்டுகின்றது அவரதுக் குரல். இதனைத்தான், “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்” என்ற இறைத்தந்தையின் வார்த்தைகளில் காண்கின்றோம். குறிப்பாக, "நான் தேர்ந்து கொண்டவர் இவரே" என்று இறைத்தந்தை கூறுவதாக லூக்கா மட்டுமே குறிப்பிடுகின்றார். அப்படியென்றால், பாவிகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், ஓரம்கட்டப்பட்டவர்களுக்கும், மீட்பளிக்கவும் விடுதலைத் தரவும் (காண்க. லூக் 4:12-18) தன்னால் தேர்ந்துகொள்ளப்பட்டவர் இவர் என்பதை மீண்டும் ஒருமுறை உலக மக்களுக்கு உறுதி செய்கின்றார் இறைத்தந்தை. அடுத்து, "இவருக்குச் செவிசாயுங்கள்" என்ற இறைத்தந்தையின் வார்த்தை, அவரின் மகனான இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து, அவர்வழி வாழ்ந்து, இறையட்சிக்காக வேள்வித்தீயில் தியாகமேற்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது. மேலும் அனைத்து மக்களின் மீட்புக்காகத் தனது ஒரே மகனைக் கையளிப்பதில் பூரிப்படைந்த இறைத்தந்தையின் வழியில், நமது வாழ்வையும் பிறருக்காக அர்பணிப்பதில் நாம் பெருமகிழ்வு காண வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
புனித பேதுருவின் மனநிலை
இந்தத் தோற்ற மாற்ற நிகழ்வில் வெளிப்படும் புனித பேதுருவின் மனநிலையைக் குறித்தும் நாம் சற்று ஆழமாகச் சிந்திப்போம். இந்த மறையுரையின் தொடக்கத்தில் நாம் கேட்டதுபோல, உடைபட விரும்பாத, அதாவது, சவால்களை ஏற்கவும், சிலுவைகளைச் சுமக்கவும் விரும்பாத நிலையில் இருந்த பேதுருவின் மனநிலையை நம்மால் பார்க்க முடிகிறது. பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார் (வச. 33) என்று உரைக்கின்றார் லூக்கா. இங்கே "இன்னதென்று தெரியாமலே சொன்னார்" என்பது அவர் பரவசமான நிலையில் (ecstasy) இதனைச் சொல்லியிருக்கலாம் என்றே நமக்குக் கருதத் தோன்றுகிறது. மேலும் பேதுரு இப்படிக் கூறியதால் அவரை நாம் தவறாக எண்ணவும் முடியாது. காரணம், மனிதர் என்ற முறையில் அவர் மிகவும் பலவீனமுடையவராகவே இருந்தார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த உருமாற்ற நிகழ்வு இடம்பெறுவதற்கு முன்பு ‘இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை’, ‘இயேசு தம் சாவை முதன் முறை முன்னறிவித்தல்’ ஆகிய இரண்டு விடயங்கள் நடைபெறுகின்றன என்பதை நாம் மேலே கண்டோம். "நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?” என்ற கேள்வியை இயேசு தனது சீடர்களிடம் எழுப்பியபோது, "நீர் கடவுளின் மெசியா" என்று உரைகின்றார் பேதுரு. அவரின் இந்த வார்த்தைகளால் பெருமிதமும் பெருமகிழ்வும் கொண்ட இயேசு, இதனை யாருக்கும் சொல்ல வேண்டாமென்று சீடரிடம் கண்டிப்பாய்க் கட்டளையிடுகின்றார். பேதுருவும் கூட யூதர்களைப் போன்று ஓர் அரசியல் மெசியாவை எதிர்பார்த்திருக்க வேண்டும். அதனால்தான், இயேசு தன் சாவைப் பற்றி அறிவித்ததும், "நீர் கடவுளின் மெசியா" என்று கூறிய அதேபேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” என்கிறார். இதனால் கோபமடைந்த இயேசு, “என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில், நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்று கூறுகின்றார்.
மேலும் தொடர்ந்து தம் சாவை முதன்முறை முன்னறிவிக்கும் இயேசு, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்” (காண்க. மத் 16:13-25) என்று கூறி இலட்சிய வாழ்விற்கான சிலுவை வழிகளையும் முன்வைக்கின்றார். ஆக, இவ்வார்த்தைகளைக் கேட்டதும் பேதுரு நிச்சயமாக அச்சம் கொண்டிருந்திருக்க வேண்டும். காரணம், இயேசுவோடு இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்றும், சவால்களற்ற (சிலுவைகள்) ஒரு சுகமான வாழ்வாக இருக்கும் என்றும் அவர் எண்ணியிருக்க வாய்ப்புண்டு. மேலும் இயேசு நிகழ்த்திய அருளடையாளங்கள், அவரது போதனைகள், மற்றும் அணுகுமுறைகள் யாவும் இவ்விதமான நம்பிக்கைகளைப் பேதுருவுக்குக் கொடுத்திருக்கலாம். ஆனால் இயேசு தனது இலட்சிய மரணத்திற்கான சிலுவை வழிகள் குறித்து அறிவித்ததும் பேதுரு திகிலடைகின்றார். மேலும் இயேசுவுடன் எருசலேமிற்குச் சென்றால், தானும் துன்ப துயரங்களையும் அவமானங்களையும் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும், ஒருவேளை மரணத்தைக் கூடச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும், பேதுரு தன் உள்ளத்தில் நினைத்திருக்கலாம். இதன் காரணமாகவே, இந்த உருமாற்ற நிகழ்வின் பரவசமான சூழலில், “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்ற கோரிக்கையை முன்வைக்கின்றார் (வச. 33).
ஆபிரகாம் மற்றும் பவுலடியாரின் உருமாற்றம்
இன்றைய முதல் வாசகத்தில், “என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை!" (வச. 2) என்று கேள்வியெழுப்பிய நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமை ஆண்டவர் வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” (வச. 5) என்று உரைக்கின்றார். இங்கே, 'ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்' (வச. 6) என்ற இறைவார்த்தைகள்தாம் அவர் கடவுளுக்கு ஏற்றவாறு தன்னை முழுவதும் உருமாற்றிக்கொண்டதை எடுத்துக்காட்டுகிறது. ஆக, கடவுளின் வார்த்தைகளை உள்ளத்தில் ஏற்று, அதற்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு, அவர்மீது இறுதிவரை நம்பிக்கைக்கொண்டு வாழ்வதும் உருமாற்றம்தான் என்பதை உணர்வோம். இதனையே இன்றைய இரண்டாம் வாசகத்திலும் காண்கின்றோம். "சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள்" (வச. 17) என்று கூறுகின்றார் புனித பவுலடியார். இங்கே, மக்கள் எல்லாரும் தன்னைப் பின்பற்றி வாழக்கூடிய அளவிற்குத் அவர் தன்னை உருமாற்றிக்கொண்டுள்ளார் என்பதைப் பார்க்கின்றோம். மேலும், "சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து பிற இனத்தவருக்கும், அரசருக்கும், இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக, அவரின் திருப்பெயரை எடுத்துச் செல்ல அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கருவியாகத் தன்னை உருமாற்றிக்கொண்டு வாழ்ந்தவர் புனித பவுலடியார் (காண்க. திப 9:1-16) என்பதையும் அவரின் வாழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
உடைபடுவோம் உருமாறுவோம்
விவசாயி ஒருவரின் தோட்டத்தில் மிக உயரமாக வளரும் அரியவகை மரம் ஒன்று இருந்தது. அது ஆண்டுதோறும் பூத்துக் குலுங்கி அழகிய பூக்களையும் காய் கனிகளையும் கொடுத்து வந்தது. அம்மரத்தை அந்த விவசாயி சிறப்பாகப் பராமரித்து வந்தார். அம்மரத்தின் அடியில் விழுந்த அதன் விதைகள் செடிகளாக முளைத்து வளர்ந்து வந்தன. ஒருநாள் அத்தோட்டத்தின் விவசாயி அச்செடிகளைப் பிடுங்குவதற்காக வந்தார். அப்போது அச்செடிகளெல்லாம் ஒருமித்த குரலில், “எங்களை எதற்குப் பிடுங்குகிறாய்?” என்று கேட்டன. அதற்கு அந்த விவசாயி, “உங்களைப் பிடுங்கிக் கொண்டுபோய் வேறிடத்தில் நட்டு வளர்க்கப்போகிறேன்” என்றார். அதற்கு அந்தச் செடிகள், “ஏன், இங்கு நாங்கள் நான்றாகத்தானே வளர்ந்து வருகிறோம். எங்களின் தாய் மரத்தின் நிழலில் இருப்பது எங்களுக்குப் பாதுகாப்பாகவும் சுகமாகவும் இருக்கிறது. நீயோ எங்களைப் பிடுங்கிக் கொண்டுபோய் வேறிடத்தில் நட்டு வைத்து எங்களை அழிக்கப் பார்க்கிறாயா” என்று முறையிட்டன. உடனே அந்த விவசாயி, “அப்படி இல்லை, நீங்கள் உங்கள் தாய் மரத்தின் நிழலில் வளர்ந்தால், உங்களால் முழுமையாக வளர்ச்சி அடைய முடியாது. நிழலில் வாழும் உங்களுக்குப் போதுமான அளவிற்குச் சூரிய ஒளியும் தண்ணீரும் கிடைக்காது. இதனால் நீங்கள் யாருக்கும் பயனில்லாமல் விரைவில் அழிந்துபோய்விடுவீர்கள்” என்று கூறினார். உண்மையைப் புரிந்துக்கொண்ட அச்செடிகள் அவருடைய விருப்பத்திற்குச் சம்மதம் தெரிவித்தன. பின்னர் அந்தச் செடிகளையெல்லாம் பிடுங்கி வேறிடங்களில் தனித்தனியாக நட்டு வளர்த்தார் அந்த விவசாயி. உருமாற்றம் பெற்ற அந்தச் செடிகள் அனைத்தும் பிற்காலத்தில் பலநூறு மடங்கு பலனளித்தன.
“ஓவியன் கை வலி சித்திரம் ஆகுது, ஒவ்வொரு வழியிலும் சாதனை உள்ளது. சிப்பியின் பொறுமை தான் முத்து போல் மின்னுது, இலைகளின் சக்தி தான் கனிகளை தாங்குது” என்றும் “உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும், வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்” என்றும் எழுதுகிறார் கவிஞர் பா.விஜய் ஆம், நாம் உடைபடும்போதுதான் உருமாற்றம் பிறக்கிறது. சவால்கள்தாம் நம் வாழ்வின் சாதனைகளாகின்றன. ஆகவே, இயேசு ஆண்டவரின் வழியில் நாமும் உருமாற்றம் பெற்று அவர் கனவுகண்ட உன்னதமான இறையாட்சியை உலகில் உருவாக்குவோம். இவ்வருளுக்காக இந்நாளில் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்