பாகிஸ்தானில் மத அவமதிப்பு குற்றச்சாட்டில் கிறிஸ்தவ இளைஞர் மீது தாக்குதல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்ததால் 22 வயது நிரம்பிய Waqas Masih என்ற கிறிஸ்தவ இளைஞர் ஒருவர், அவரது சக ஊழியர் Zohaib Iftikhar என்பவரால் தாக்கப்பட்டார் என்று யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ச் 21, கடந்த வெள்ளிக்கிழமையன்று, லாகூரில் உள்ள அவரது பணியிடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்றும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், தாக்குதல் நடத்தியவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அவரை வற்புறுத்தியதாகக் குற்றம் சாட்டுகின்றனர் என்றும் கூறியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
மாசிஹ் இஸ்லாமிய நூல்களை இழிவுபடுத்தியதாக அவரது சக ஊழியர் இஃப்திகார் குற்றம் சாட்டி, வெட்டுக்கருவி மூலம் (box cutter) அவரது தொண்டையை அறுத்தார் என்றும், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாசிஹ் உயிர் பிழைத்தபோதிலும், பலத்த காயங்களுக்கு ஆளானார் என்றும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்திக் குறிப்பு.
தொடக்கத்தில் இந்தத் தாக்குதல் தனிப்பட்ட தகராறில் இருந்து ஏற்பட்டதாகக் காவல்துறையினர் கூறினாலும், மாசிஹின் குடும்பத்தினரும் வழக்கறிஞர்களும் இது மத ரீதியாக நடத்தப்பட்ட தாக்குதல்தான் என்று வலியுறுத்திக் கூறியதாகவும் உரைக்கின்றது அச்செய்தித் தொகுப்பு.
மேலும் இந்தச் சம்பவம், கட்டாய மதமாற்றம் மற்றும் தெய்வநிந்தனைக் குற்றச்சாட்டுகளின் அச்சுறுத்தல் உட்பட, பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளது அச்செய்தி நிறுவனம்,
பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் மிகச் சிறிதளவே என்றாலும், அவர்கள் அதிகளவில் துன்ப துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது அந்நிறுவனம். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்