MAP

சிறைபிடிக்கப்பட்ட அரசன் சிறைபிடிக்கப்பட்ட அரசன் 

தடம் தந்த தகைமை – யூதா அரசன் யோயாக்கின் செயல்கள்

யூதாவின் அரசன் யோயாக்கினும் அவன் தாயும் அவன் அலுவலர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் பாபிலோன் மன்னனிடம் சரணடைந்தனர். அவனைப் பாபிலோன் மன்னன் தான் ஆட்சியேற்ற எட்டாம் ஆண்டில் சிறைப்படுத்தினான்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

யோயாக்கின் அரசனான போது அவனுக்கு வயது பதினெட்டு. எருசலேமில் மூன்று மாதமே அவன் அரசாண்டான். எருசலேமைச் சார்ந்த எல்நாத்தானின் மகள் நெகுஸ்தா என்பவளே அவனுடைய தாய். யோயாக்கின் தன் தந்தை செய்த அனைத்தின்படியே ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். அக்காலத்தில் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் படைவீரர் எருசலேமின் மீது படையெடுத்து வந்து நகரை முற்றுகையிட்டனர். அப்பொழுது பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரும் வந்து நகரை முற்றுகையிட்டிருந்த வீரர்களோடு சேர்ந்து கொண்டான். எனவே, யூதாவின் அரசன் யோயாக்கினும் அவன் தாயும் அவன் அலுவலர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் பாபிலோன் மன்னனிடம் சரணடைந்தனர். அவனைப் பாபிலோன் மன்னன் தான் ஆட்சியேற்ற எட்டாம் ஆண்டில் சிறைப்படுத்தினான்.

பின்பு, அவன் ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனையிலும் இருந்த செல்வங்களை எல்லாம் எடுத்துச் சென்றான். ஆண்டவர் உரைத்த வாக்கின்படி, ஆண்டவரின் இல்லத்தில் இஸ்ரயேலின் அரசர் சாலமோன் செய்து வைத்திருந்த எல்லாப் பொன்கலன்களையும் துண்டுதுண்டாக்கினான். மேலும், அவன் எருசலேம் முழுவதையும், தலைவர்கள் அனைவரையும், ஆற்றல் வாய்ந்த பதினாயிரம் படை வீரர்களையும் சிற்பக் கலைஞர்களையும், கொல்லர்களையும் நாடு கடத்தினான். நாட்டில் ஏழை மக்களைத் தவிர எவரையும் விட்டுவைக்கவில்லை. மேலும், அவன் யோயாக்கினையும், அரசனின் தாயையும், மனைவியரையும், அவனுடைய அதிகாரிகளையும், நாட்டின் தலைவர்களையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தினான். மேலும், வலிமை வாய்ந்த ஏழாயிரம் பேர்களைக் கொண்ட முழுப்படையையும் போர்த் திறனும் உடல் ஆற்றலும் கொண்ட ஆயிரம் தச்சர்களையும், கொத்தர்களையும் அவன் சிறைப்படுத்திப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றான். யோயாக்கினுக்குப் பதிலாக அவனுடைய சிறிய தந்தை மத்தனியாவை அரசனாக்கி, அவனது பெயரைச் “செதேக்கியா” என்று மாற்றினான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 மார்ச் 2025, 14:57