தடம் தந்த தகைமை - எனது சதை உண்மையான உணவு
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை
உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பார்; நானும் அவர்களோடு இணைந்திருப்பேன், (யோவா 6:55&56) என்றார் இயேசு.
அன்றாட உணவாம் அப்பத்திற்கும், திராட்சை இரசத்திற்கும் அலைமோதிக்கொண்டிருந்த சமூகத்திற்குத் தமது சதையையும், இரத்தத்தையும் உணவாக்கத் துணிந்தார் இயேசு. அதனைத் தம் எளிய வாழ்வால், போதனைகளால், அருஞ்செயல்களால், அரவணைப்பால், நீதிக்குரலால் வெளிப்படுத்தினார். இறுதியில் பாஸ்கா உணவு வேளையில் தம்மைப் “பங்கிடும் உணவாக” உருமாற்றினார். அவ்வுணவில் பங்கேற்றவரும் தங்களைப் பங்கிட்டு வாழப் பணித்தார்.
இயேசு தம்மை உணவாக்கும் நிகழ்வை ஒரு பந்தி வழியாக நிறுத்திக் கொள்ளவில்லை. தம் கல்வாரிப் பாடுகள் வழியாக அதனை நிறைவு செய்தார். விளிம்புநிலை மக்களின் எழுச்சிக்காகவும், சமத்துவ நிலைப்படுத்தலுக்காகவும் குரலுயர்த்தி இயக்கமாய்ச் செயற்படுகையில் உடலும், உதிரமும், உயிரும் பறிக்கப்படும் என்பதே உலகம் உணர்த்தும்
பாடம். அவரை உணவாய் உண்ணும் நம் பார்வைகளும், பணிகளும் அவர்போலத்தானே இருந்தாக வேண்டும். இயேசு உடைக்கப்பட்டது நமக்காக. நாமும் நம்மை உடைத்துப் பிறர் வாழ்வு மேம்படக் கொடுப்பதே கிறிஸ்தவம்.
இறைவா! என்னைத் தக்க வைத்துக்கொள்ள அல்ல, தானமாக்கவே இந்த வாழ்வெனப் புரிந்து செயலாற்ற உம் உணவால் எனக்கு உரமூட்டும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்