ஏழை நாடுகளின் கடன்களை மன்னிக்க யூபிலி ஆண்டில் அழைப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உலகின் தெற்கு நாடுகள் தங்கள் வெளிநாட்டுக் கடன்களால் கல்வி மற்றும் நல ஆதரவு நடவடிக்கைகளை நிறைவேற்றமுடியா நிலையில் இருப்பதாக இங்கிலாந்தின் பிறரன்பு அமைப்புகள் கவலையை வெளியிட்டுள்ளன.
யூபிலி ஆண்டின் ஒரு பகுதியாக ஏழை நாடுகளின் கடன்களை பணக்கார நாடுகள் மன்னிக்க வேண்டும் என்ற அழைப்பை விடுக்கும் பிறரன்பு அமைப்புக்கள், 32 ஆப்ரிக்க நாடுகள் தங்கள் நலஆதரவு நடவடிக்கைகளுக்குச் செலவளிப்பதைவிட வெளிநாட்டு கடன்களுக்கான வட்டியாக ஒவ்வோர் ஆண்டும் வழங்கும் தொகை அதிகம் என கூறுகின்றன.
2025ஆம் யூபிலி ஆண்டில் ஏழை நாடுகளின் கடன்கள் மன்னிக்கப்பட வேண்டும் என CAFOD, Christian Aid, Save the Children, Oxfam உள்ளிட்ட இங்கிலாந்தின் பிறரன்பு அமைப்புக்கள் இணைந்து விடுத்துள்ள அழைப்பில், கடன்களுக்கான வட்டியால் கல்வியும் நல ஆதரவுத் திட்டங்கள் மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதிப்புக்களையும் நிவர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அரசு தான் வழங்கிய கடன்களை அகற்ற முன்வருவது மட்டுமல்ல, இங்கிலாந்திலிருந்து கடன்வழங்கியுள்ள தனியார் நிறுவனங்களையும் அழைத்து அவைகளோடு பேச்சுவார்த்தை நடத்தி ஏழை நாடுகளின் வெளிநாட்டுக் கடனை குறைக்க முன்வரவேண்டும் என்ற அழைப்பையும் இங்கிலாந்தின் பிறரன்பு நிறவனங்கள் இணைந்து விடுத்துள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்