தடம் தந்த தகைமை : மோவாபு நாட்டில் எலிமலேக்கின் குடும்பம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அன்பர்களே, தடம் தந்த தகைமை என்ற விவிலிய வரலாற்று நிகழ்வுகள் குறித்த பகுதியில் இவ்வாரம் ரூத்து நூலில் இருந்து சில நிகழ்வுகளைப் பார்ப்போம். மனித வரலாற்றில், கடவுள், துயரங்களை எல்லாம் எப்படி இன்பங்களாக மாற்றித் தருகின்றார் என்பதே விவிலிய நூலின் அடிப்படைக் கருத்து. அத்தகைய மாபெரும் செயல்களில் பெண்களுக்கும் அரியதொரு பங்கை அளிக்கிறார் என்பதை இந்நூல் நமக்கு விளக்குகின்றது. சிறப்பாக ஒரு மாமியாருக்கும் ஒரு மருமகளுக்கும் இடையே இருக்கக்கூடிய புனிதமான உறவை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. ஒட்டுமொத்தமாகக் கூறவேண்டுமெனில், ஒரு குடும்பத்தில் இருக்கவேண்டிய விழுமியங்களை இந்நூல் நமக்கு வலியுறுத்திக் கூறுகின்றது. இப்போது கதைக்குள் செல்வோம்.
நீதித் தலைவர்கள் ஆட்சியாளராய் இருந்த காலத்தில். நாட்டில் ஒரு கொடிய பஞ்சம் உண்டாயிற்று. யூதாவிலுள்ள பெத்லகேம் ஊரைச் சார்ந்த ஒருவர் பிழைப்பதற்கென்று தம் மனைவியையும் மைந்தர் இருவரையும் அழைத்துக் கொண்டு மோவாபு நாட்டிற்கு சென்றார். அவர் பெயர் எலிமலேக்கு; அவர் மனைவி பெயர் நகோமி. மைந்தர் இருவரின் பெயர்கள் மக்லோன், கிலியோன் என்பன. அவர்கள் யூதாவிலிருந்த பெத்லகேமைச் சார்ந்த எப்ராத்துக் குடியினர். அவர்கள் மோவாபு நாட்டை அடைந்து அங்கு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் அங்கே இருந்த காலத்தில் எலிமலேக்கு இறந்துபோனார். எனவே, நகோமி தம் இரு மைந்தரைத் தவிர வேறு துணையற்றவரானார். அவ்விருவரும் மோவாபு நாட்டுப் பெண்களை மணந்து கொண்டனர். ஒருவர் பெயர் ஓர்பா; மற்றவர் பெயர் ரூத்து. அவர்கள் பிழைக்க வந்து ஏறத்தாழப் பத்தாண்டுகள் ஆயின. பிறகு, மக்லோனும் கிலியோனும் இறந்து போயினர். நகோமி தம் கணவரையும் இரு மைந்தரையும் இழந்து தன்னந் தனியராய் விடப்பட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்