எத்தியோப்பாவின் முதல் ஆப்பிரிக்க Focolare மாநாடு
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
ஃபோகோலாரே ஆன்மிக இயக்கத்தின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அவ்வியக்கத்தின் பிரதிநிதி ஆயர்களையும் ஒன்றிணைத்து முதல் பான் ஆப்பிரிக்கா மாநாட்டை அடிஸ் அபாபாவில் உள்ள தொன் போஸ்கொ மையத்தில் எத்தியோப்பியா கடந்த வாரம் நடத்தியது.
12 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 24 ஆயர்களும், இத்தாலியைச் சேர்ந்த இவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இரண்டாம் உலகப்போரின் துயரங்கள் மத்தியில் இவ்வியக்கம் உருவானது என்று நினைவூட்டியதுடன், துயரங்களிலும் நம்பிக்கையைக் காணமுடியும் என்று ஜிம்மா போங்கா மறைமாவட்டத்தின் ஆயரும், இயக்கத்தின் பிரதிநிதியுமான ஆயர் மார்கோஸ் கூறினார்.
இத்தாலியைச் சேர்ந்த Chiara Lubich என்னும் பொதுநிலையினர் ஒருவரால் நிறுவப்பட்ட Focolare இயக்கம் தற்போது, எத்தியோப்பியா உள்பட 182 நாடுகளில் செயல்பட்டு வருவதோடு ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்கன்னியர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களில் உள்ளவர்கள் என பல கோடிக்கணக்கான உறுப்பினர்களை ஒன்றிணைத்து வருகிறது.
அமைதி, ஒற்றுமை மற்றும் ஆன்மிக மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட Focolare இயக்கம் கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிப்பதோடு, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களுடன் உரையாடலை வலுப்படுத்தி வருகிறது.
Focolare என்னும் உலகளாவிய ஆன்மிக இயக்கம் 30 ஆண்டுகளுக்கு முன்பு வணக்கத்திற்குரிய கிளாடியா அவர்களால் எத்தியோப்பிய நாட்டிற்கு, அவர் குருமட மாணவராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்டது என்று Bahir Dar–Dessie மறைமாவட்டத்தின் ஆயர் Lisane Christos கூறினார்.
பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகள் நிறைந்த ஆப்பிரிக்க கண்டத்தின் மக்களுக்கு Focolare ஆன்மிக இயக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அடிஸ் அபாபாவின் பேராயர் கர்தினால் Berhaneyesus Souraphiel அவர்கள், அம்மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் தனது கருத்துக்களையும், ஆசீரையும் வழங்கினார்.
மேலும் இம்மாநாட்டில் அடிஸ் அபாபாவின் அப்போஸ்தலிக்க தூதரகச் செயலர் பேரருள்திரு Massimo Caterin அவர்கள் பங்கேற்று, மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இயக்கத்தின் மீது கொண்டிருந்த அன்பு மற்றும் ஆதரவை எடுத்துரைத்ததோடு, திருத்தந்தை அனுப்பிய செய்திகள் மற்றும் ஆசிகளையும் பகிர்ந்து கொண்டதுடன், அவ்வியக்கத்தினரின் பணிகளுக்கு திருத்தந்தையின் தொடர்ச்சியான ஆதரவையும் ஊக்கத்தையும் எடுத்துரைத்தார்.
நாடு முழுவதும் திறம்பட செயல்படுகிற நிரந்தர உறுப்பினர்களைக் கொண்ட எத்தியோப்பியாவின் Focolare ஆன்மிக இயக்கம், தற்போது அடிஸ் அபாபா நகரத்தில் உள்ள புனித யோசேப்பு பேராலய வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்